ஓசூருக்கு மெட்ரோ வேண்டாம்.. பெரிய சிக்கலாகிடும்! பாய்ந்து வரும் கன்னட அமைப்புகள்.. காரணம் என்ன?
பெங்களூர்: பொம்மச்சந்திரா - ஓசூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் தமிழ்நாட்டில் 11 கிலோ மீட்டரும், கர்நாடகாவில் 12 கிலோமீட்டர் தூரம் வரும் அளவில் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நம்ம மெட்ரோ ரயில் சேவையை தமிழகத்துடன் இணைத்தால், இன்னும் அதிகம் பேர் தமிழ்நாட்டில் இருந்து எளிதாக புலம் பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 'நம்ம மெட்ரோ' என்ற பெயரில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நம்ம மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் - ஓசூர் ரோட்டில் பொம்மசந்திரா வரை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இருந்து பெங்களூரை இணைக்கும் அத்திப்பள்ளி பகுதியில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். காலை மற்றும் மாலை வேளைகளில் இரு மாநில பார்டர்கள் வாகன நெரிசலில் சிக்கி திணறும். இதனை கருத்தில் கொண்டு தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம் சந்தாபுராவுக்கு பதிலாக தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள அத்திப்பள்ளி வரை விரிவாக்கம் செய்ய கர்நாடகா ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அத்திப்பள்ளிக்கு அடுத்ததாக தமிழக பகுதியான ஓசூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதாவது, பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வரை 23 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் - பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் சந்தித்து ஆலோசனை மெற்கொண்டனர்.
அதன்படி பொம்மச்சந்திரா - ஓசூர் இடையேயான மெட்ரோ பாதையில் தமிழ்நாட்டில் 11 கிலோ மீட்டரும், கர்நாடகாவில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தால், இரு மாநில பயணிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், பெங்களுரின் நம்ம மெட்ரோவை ஓசூர் மெட்ரோ வரை இணைக்க கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கன்னட ரக்ஷன வேதிக் அமைப்பின் தலைவர் நாரயண கவுடா கூறுகையில், "நம்ம மெட்ரோ ரயில் சேவையை தமிழகத்துடன் இணைக்கக் கூடாது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். அத்திப்பள்ளி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற எல்லையோர பகுதிகளில் இதை நாம் காணலாம். தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு வந்து பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.
நம்ம மெட்ரோ ரயில் சேவையை தமிழகத்துடன் இணைத்தால், இன்னும் அதிகம் பேர், தமிழ்நாட்டில் இருந்து எளிதாக புலம் பெயர்ந்து வருவார்கள்.. இதனால், கன்னட மக்கள் வாழ்வதற்கு சிரமம் ஏற்படும். இதை டிகே சிவக்குமாரிடம் முதல்வர் சித்தராமையாவிடமும் நாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம். இந்த விவகாரத்தை விரைவில் நாங்கள் கையில் எடுப்போம்" என்றார்.
பெங்களூரின் நம்ம மெட்ரோ ரயில் சேவையை தமிழகத்தின் ஓசூர் வர கொண்டு வரும் திட்டத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் சரி.. அதன்பிறகு கர்நாடக அரசு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உற்பத்தி துறையில் ஓசூரில் தற்போது தொடர்ச்சியாக முதலீடுகள் குவிந்து வருகின்றன.
பெங்களூரில் தலைமை அலுவலகம் வைத்து இருக்கும் ஓலா நிறுவனம் தனது உற்பத்தி தொழிற் சாலையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. இது தவிர வேறு சில நிறுவனங்களும் பெங்களூருக்கு பதிலாக ஓசூர்- கிருஷ்ணகிரி பகுதிகளில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுகிறது. இதற்கும் கன்னட ஆதரவு அமைப்புகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓசூரை இணைக்கும் திட்டத்தால், தமிழகத்திற்கே அதிக பயன் என்று வாதிட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications