யாரோ 10 பேர அடிச்சி டான் ஆகல.. அடிச்ச 10 பேருமே டான்தான்.. கேஜிஎப் ராக்கியும்.. முத்தப்ப ராயும்!
பெங்களூர்: "Powerfull people coming from powerfull places.." இது கேஜிஎப் திரைப்படத்தில் 'ராக்கி பாய்' பற்றி சொல்லப்படும் பவர்ஃபுல் டயலாக். புத்தூர் என்ற சின்ன ஊரிலிருந்து வந்து பெங்களூரின் தாதாவாக கோலோச்சிய முத்தப்ப ராயை மனதில் வைத்துதான் இந்த டயலாக் எழுதப்பட்டிருக்க கூடும். அதனால்தான் அந்த வசனத்திற்கு அத்தனை ஈர்ப்பு இருந்தது.
நமது ராக்கி பாய்க்கும், முத்தப்ப ராய்க்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஷூவுக்கு பாலிஸ் போட்டு பன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த ராக்கி, மொத்த மும்பைக்கும் தாதாவாக மாறுவார் என்று யாராவது நினைத்திருப்போமோ. விஜயா பேங்கில், கிளர்க்காக வேலை பார்த்த முத்தப்ப ராய் டானாக மாறி கலங்க வைப்பார் என்றும் யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லைதான்.
தொழில்நிமித்தமாக 1980ஸ்களில் பெங்களூர் வருகிறார் முத்தப்ப ராய். அங்கு தனது தொழிலை காப்பாற்றிக்கொள்ள ஒரு அடிதடியில் இறங்க வேண்டியுள்ளது. விரட்டி வந்த போலீஸ்காரரை தலையில் பாட்டிலால் அடித்துவிட்டு, "நான் சின்னப் பையன் இல்ல.. ராக்கி.." என்று சொன்ன பிறகு ராக்கி எப்படி ஃபேமஸ் ஆனாரோ அந்த மாதிரி முத்தப்ப ராய் ரவுடியாக புகழடையத் தொடங்குகிறார்.
பெங்களூருவை அதிரவைத்த நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மரணம்... தாவூத்துக்கே டப் ஃபைட் கொடுத்த டான்!
தாவூத் இப்ராஹிம் தொடர்பு
இவரது புகழ், மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் வரை சென்று சேர்ந்தது. அப்போது பெங்களூரின் டான் உலகம் எம்.பி.ஜெயராஜ் என்ற பிரபல ரவுடியின் கீழ் இருந்தது. ஜெயராஜை பார்த்தாலே லோக்கல் ரவுடிகள், கால் நடுங்கிவிடும் எனும் அளவுக்கு கொலை, கட்டப் பஞ்சாயத்துகளில் கொடி கட்டி பறந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செழித்து வளர ஆரம்பித்த, 1980களின் இறுதி காலகட்டம் அது. எனவே பெங்களூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தார் தாவூத். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த நபர்தான், முத்தப்ப ராய்.
பெங்களூர் ரவுடி
ஜெயராஜுக்கு எதிரே நின்று பேசக் கூட பயப்படும், லோக்கல் ரவுடிகளை நம்ப தாவூத் தயாராக இல்லை. அவருக்கு தேவை புதிதாக ஒரு தாதா.. பயம் கொஞ்சமும் இல்லாத ஒரு ராக்கி பாய். எனவேதான் அந்த டாஸ்க் முத்தப்ப ராயிடம் கொடுக்கப்பட்டது. வெயிட்... "ஷெட்டியிடமுள்ள மும்பை உனக்கு வேண்டுமானால், பெங்களூரில் ஒரு சம்பவம் செய்ய வேண்டும்" என்று ராக்கி பாய்க்கு அசைன்மென்ட் கொடுப்பதை போல இருக்கிறதே என்று தோன்றுகிறதா? கரெக்ட்தான்.
கொலை திட்டம் ஃபெயிலியர்
பெங்களூரில் சிலை திறக்க வரும் கருடனை கொலை செய்ய, ராக்கி பாய் போட்ட திட்டம்போல, மைசூரில் வைத்து ஜெயராஜை கதை முடிக்க ஆயில் குமார் போன்ற லோக்கல் ரவுடிகளை வைத்து போட்ட பிளான் சொதப்புகிறது. வீச்சரிவாள், கத்தி போன்றவற்றை வைத்து கொலை செய்து வந்த ரவுடிகளுக்கு, மும்பையிலிருந்து முத்தப்ப ராய் தர வைத்து கொடுத்த துப்பாக்கியை வைத்து குறி பார்த்து சுட முடியவில்லை. இம்சை அரசன் 23ம் புலிகேசி போல கரடிக்கு குறி வைத்த அம்பு கண்ட இடங்களுக்கெல்லாம் பறப்பதை போல துப்பாக்கி குண்டுகள் பறந்தன. ஆனால் ஜெயராஜை அசைக்க முடியவில்லை.
ஷார்ப் ஷூட்டர்கள்
இந்த நிலையில்தான், வழக்கு ஒன்றிற்காக பெங்களூர் சித்தாபுரா காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட வேண்டிய நிலை கருடனுக்கு.. சாரி.. ஜெயராஜுக்கு ஏற்படுகிறது. ராக்கி பாய்.. சாரி.. முத்தப்ப ராய் இந்த சந்தர்ப்பத்தை கேஜிஎப் பட கிளைமேக்ஸ் போல பக்காவாக பிளான் போட்டார். மும்பையிலிருந்து ஷார்ப் ஷூட்டர்களை வரவைத்தார். லால்பாக் அருகே, ஜெயராஜ் தனது அம்பாசிட்டர் காரில், சுற்றிலும் படை பரிவாரங்களுடன், காவல் நிலையத்திற்கு கையெழுத்திட போனபோது, மும்பை ஷூட்டர்கள், சரியாக குறி வைத்து சரமாரியாக சுட்டனர் (வருடம் 1989). ஜெயராஜுடன் காரில் இருந்த வக்கீல் உடலை முதலில் குண்டுகள் துளைத்தன. உடனே சுதாரித்த ஜெயராஜ், வக்கீல் உடலை தனக்கு முன்பாக பிடித்து இழுத்து, தனது உடலில் குண்டுகள் பாயாமல் காப்பாற்ற நினைத்தார். ஆனால், மும்பை தோட்டாக்களுக்கு, பாகுபாடு தெரியவில்லை. முத்தப்ப ராய் கட்டளையை ஏற்று, ஜெயராஜின் உடலை துளைத்துக் கொன்றன.
முதல் துப்பாக்கி கலாச்சாரம்
பட்டப் பகலில் நடந்த இந்த கொலை, பெங்களூரு நகரில் முதல் முறையாக துப்பாக்கி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி அலற வைத்தது. முத்தப்ப ராய் பெங்களூர் நிழலுலக தாதாவாக முடிசூட்டிக் கொண்டார். நகரிலுள்ள அத்தனை ரவுடிகளும், முத்தப்ப ராய்க்கு கப்பம் கட்டி, தங்களின் புதிய தாதாவாக ஏற்றனர். மும்பை வரை தொழில் தொடர்புகளை விரிவுபடுத்தினார். இதன்பிறகு 1990களில், முத்தப்ப ராய் உயிருக்கே அதே தோட்டா வடிவில் ஒருமுறை ஆபத்து வர, யூஏஇக்கு சென்றுவிட்டார். ஆனால் பெங்களூர் அவரின் சிஷ்யர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அடித்த 10 பேருமே டான்தான்
அங்கிருந்தபடியே, பெங்களூரில் மிரட்டல்கள் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்தார். சில கொலைகளையும் செய்ய வைத்தார். பிறகு, தாவூத்துடன் தொடர்பை துண்டித்து, 'இந்து தாதா' என்ற வகையில் உருவானார். இந்தியாவுக்கு காவல்துறை அழைத்து வந்தாலும், எந்த வழக்குமே நீதிமன்றத்தில் நிற்கவில்லை. சாட்சிகளை போலீசால் திரட்ட முடியவில்லை. எனவே, 2008ல் ஜெய கர்நாடகா என்ற கன்னட அமைப்பை ஏற்படுத்தி, பொதுத் தொண்டுகளை செய்து வந்தார். சுற்றிலும் எப்போதும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் கடைசிவரை பவனி வந்து, தாதா என்றால் எப்படி இருப்பார்கள் என்பதை 2K கிட்சுக்கும் நினைவுபடுத்தியபடி இருந்தார். இந்த நிலையில்தான், மூளை புற்றுநோய் காரணமாக, 2 வருடமாக அவதிப்பட்டு, இன்று அதிகாலை உயிரிழந்தார் முத்தப்ப ராய். இவர் யாரோ 10 பேரை அடித்து டான் ஆகவில்லை.. இவர் அடித்த 10 பேருமே டான்தான்!