‛பெரியஅடி’.. கர்நாடகாவில் சறுக்கும் பாஜக! கைஓங்கும் காங்கிரஸ்! லோக்சபா தேர்தல் பரபர கருத்து கணிப்பு
பெங்களூர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் எனவும், அதேவேளையில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறும் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. ஏற்கனவே சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்த பாஜகவினருக்கு இந்த கருத்து கணிப்பும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் மெகாகூட்டணி அமைத்துள்ளனர்.

அதேவேளையில் பாஜகவும் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களை அழைத்து டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கட்சி தலைவர்கள் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலான வாக்குறுதிகளை அளித்து மக்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஸ்மால் பாக்ஸ் சார்பில் கர்நாடகா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பு பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் உள்ளது. கர்நாடகாவில் மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு ‛தாமரை' கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
அதாவது கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. காங்கிரஸ் சார்பில் தற்போதைய துணை முதல்வரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் வென்றார்.

அதேபோல் ஜேடிஎஸ் கட்சி சார்பில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வெல் ரேவண்ணா வெற்றார். இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். அதோடு முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவின் மகன் ஆவார். ஹாசன் என்பது தேவேகவுடாவின் சொந்த ஊராகும். அதோடு ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். இத்தகைய சூழலில் தான் அவர் வெற்றி பெற்றார். பிற 26 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஆனால் தற்போதைய கருத்து கணிப்பு முடிவு என்பது பாஜவுக்கு சறுக்கலை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்மால் பாக்ஸ் நடத்திய கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 11-12 இடங்களையும், பாஜக 15-16 இடங்களையும், ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி கூடுதலாக 10க்கும் அதிக இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜக 10 தொகுதிகளை இழக்க நேரிடலாம் எனவும், ஜேடிஎஸ் கடந்த முறையை போல் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்துள்ளது.












Click it and Unblock the Notifications