ராகுல் காந்திக்கு எதிராக சதி- நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் முடக்கும் பாஜக- டிகே சிவகுமார் ஆவேசம்
பெங்களூர்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பயங்கர சதி நடந்து கொண்டிருக்கிறது; ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் பாஜக முடக்குகிறது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சாடியுள்ளார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இத்தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி முதலில் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு டிஸ்மிஸ் ஆனது. இதனையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவையும் குஜராத் உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. இதனால் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்.
இத்தீர்ப்பு வருவதற்கு முன்னதாக பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், ராகுல் காந்திக்கு எதிராக சிலர் சதி செய்து கொண்டிருக்கின்றனர். குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கு பின்னர் நாங்கள் பதிலடி தருவோம். குஜராத் தீர்ப்புக்கு பின் மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார்.
ராகுல் காந்தி மனு டிஸ்மிஸ் ஆன நிலையில் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார், ராகுல் காந்தியின் வளர்ச்சியை பாஜகவால் ஏற்க முடியவில்லை. ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்கு செல்ல விடாமல் முடக்குகிறது பாஜக. ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது; ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இருக்கின்றன. ராகுல் காந்தியின் அனைவரையும் ஒருங்கிணைத்து போராடிக் கொண்டிருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications