கண்ணில் மிளகாய் பொடியை தூவி மாமியாரிடம் தங்க நகை கொள்ளையடித்த மருமகன்.. கடைசியில் ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தை சேர்ந்த நிங்கவ்வா பூஜாரி என்ற மாமியாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி 130 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு நாடகமாடியுள்ளார் மருமகன் நிங்கப்பா பூஜாரி. அவர் எப்படி சிக்கினார் என்ன நடந்தது எனப்தை பார்ப்போம். மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை என்று கூறி நடுரோட்டில் நிற்க வைத்து கொள்ளையடிக்க வைத்தவர் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
கர்நாடகா மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா அஞ்சுடகி கிராமத்தை சேர்ந்த நிங்கப்பா பூஜாரிக்கு 30 வயது ஆகிறது. இவரது மாமியார் நிங்கவ்வா பூஜாரிக்கு 70 வயது ஆகிறது. இவர் விஜயப்புரா அருகே குலேதகுட்டாவை அடுத்து உள்ள நிடகுந்தி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். நிங்கவ்வா பூஜாரி கணவனை இழந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அஞ்சுடகியில் உள்ள மகள் வீட்டுக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார் நிங்கவ்வா பூஜாரி. அப்போது அஞ்சுடகி கிராமத்தில் மாமியாரை சந்தித்த நிங்கப்பா, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் திடீரென்று நடு வழியில் இருசக்கர வாகனம் ஓடாமல் பழுதாகி நின்றது. நிங்கப்பா மோட்டார் சைக்கிளை சோதனை செய்தார். அப்போது பெட்ரோல் இல்லை என்று மாமியாரிடம் கூறினார்.
இதையடுத்து நான் பெட்ரோல் வாங்கி வருகிறேன். நீங்கள் இங்கேயே நில்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். அவர் சென்ற சில நிமிடங்களில் 2 பேர் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து நிங்கவ்வா அருகில் சென்றனர். பின்னர் கண்ணில் மிளகாய் பொடியை தூவிய அவர்கள், நிங்கவ்வாவின் வாயில் துணியை திணித்தனர்.
இதில் நிங்கவ்வா நிலை தடுமாறியதும் அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்ளிட்ட 130 கிராம் தங்க நகைகளை 2 பேரும் பறித்து சென்றுவிட்டார்கள்.. இதையடுத்து சிறிது நேரம் கழித்து நிங்கப்பா அங்கு வந்தார். அப்போது அவரிடம் நடந்த சம்பவத்தை நிங்கவ்வா கூறினார்.
பின்னர் 2 பேரும் சென்று இண்டி எலக்கி போலோஸ் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னல்களை கைப்பற்றினர். அப்போது சம்பவ இடத்தில் நிங்கப்பா செல்போன் சிக்னல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் விசாரிக்க தொடங்கிய உடனேயே மாமியாரும், மருமகன் நிங்கப்பா மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி நிங்கப்பாவை போலீசார் மடக்கி பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் மாமியாரிடம் இருந்து திட்டமிட்டு தங்க சங்கிலிகளை பறித்து சென்றதாக கூறினார். இதற்கு அவரது நண்பர் பரசுராம் உதவினாராம்.
பெட்ரோல் வாங்கி வருவதாக கூறி சென்ற நிங்கப்பா தான் அணிந்திருந்த உடையை மாற்றி கொண்டு நண்பர் பரசுராமுடன் முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து மாமியார் நிங்கவ்வா முகத்தில் மிளகாய் பொடி தூவி 130 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்ததும், அதன் பிறகு அவர் நாடகமாடியதும் செல்போன் சிக்னலால் தெரியவந்தது. இதையடுத்து நிங்கப்பா மற்றும் அவரது நண்பர் பரசுராமை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 130 கிராம் தங்க நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். தற்போது 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications