இஸ்லாமிய பழ வியாபாரியை தாக்கியவர்கள் விடுதலை! தர்பூசணி பழம் உடைத்து வரவேற்ற ஸ்ரீராம் சேனா
பெங்களூரு: கர்நாடகாவில் கோயில் வாசலில் தர்பூசணி விற்பனை செய்து வந்த இஸ்லாமியர் வியாபாரியின் கடையை சூறையாடி சிறைக்கு சென்ற ஸ்ரீராம் சேனா அமைப்பினரின் விடுதலையை அந்த அமைப்பினர் தர்பூசணி பழம் உடைத்து கொண்டாடினர்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடுத்தடுத்த பிரச்சனைகளை இந்துத்துவ அமைப்புகள் கையில் எடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாவில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை நடத்தக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதப் பிரச்சனைகளால் அமைதியிழந்த கர்நாடகா
இதன் தொடர்ச்சியாக மசூதிகளில் தொழுகைக்கு அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய கறிக்கடைகளில் ஹலால் கறிகளை இந்துக்கள் வாங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங்தள் அமைப்பினர், சில கடைகள் மீது தாக்குதலும் நடத்தினர்.

இஸ்லாமிய பழ வியாபாரிகளுக்கு குறி
இந்த விவகாரங்கள் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும் மத பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் இந்து ஜனஜக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு. கர்நாடகா பழ வியாபாரத்தில் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்களிடம் இந்துக்கள் யாரும் பழங்களை வாங்கக்கூடாது எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

எச்சில் ஜிஹாத் பிரச்சாரம்
அதாவது இஸ்லாமிய வியாபாரிகள் பழங்களிலும், பிரட்டுகளிலும் எச்சில் துப்பி விற்று "எச்சில் ஜிஹாத்" செய்து வருகின்றனர் என அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகெர் தெரிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "கர்நாடக பழ வியாபாரத்தில் இஸ்லாமியர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. அவர்கள் பழங்களிலும் பிரட்களிலும் எச்சில் துப்பி விற்பனை செய்து வருவதை நாம் பார்த்தோம். இந்த இஸ்லாமியர்கள் செய்து வரும் தொழில் என்பது 'எச்சில் ஜிஹாத்' தான்." என்றார்.

பழ வியாபாரி மீது தாக்குதல்
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கர்நாடகாவின் தர்வாத் மாவட்டத்தில் உள்ள நுக்கிகேரி கிராமத்தில் அனுமந்தா கோயில் வாசலில் 20 ஆண்டுகளாக தர்பூசணி விற்பனை செய்து வந்த நபிசாப் கில்லெதாரை ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த சிதாண்ட கலால், குமார் கட்டிமனி, மயிலரப்பா குட்டப்பனவா மற்றும் மகாலிங்க ஐகலி ஆகியோர் தாக்கி கடையை சூறையாடினர்.

4 பேர் கைது
அந்த வியாபாரி உடைந்து கிடக்கும் தர்பூசணி பழங்களை பார்த்து அழுத படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

உற்சாக வரவேற்பு
இதனை தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வந்த 4 பேரையும் மாலை அணிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் இஸ்லாமிய பழ வியாபாரியின் கடை சூறையாடப்பட்டதை கொண்டாடும் விதமாக தர்பூசணி பழம் ஒன்றையும் அவர்கள் உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் காவித்துண்டு அணிந்துகொண்டு பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications