“கொடூரம்” - ஆதார் இல்ல..போ! கருணை இழந்த கர்நாடக டாக்டர் - இரட்டை குழந்தைகளுடன் இறந்த தமிழ் கர்ப்பிணி
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு மருத்துவமனையில் பிரசவ வலியில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாததால் வீட்டுக்கு சென்று இரட்டை குழந்தையை ஈன்றெடுத்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயது பெண் கஸ்தூரி. இவர் கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த புதன்கிழமை இரவு பிரசவ வலியால் அவதிப்பட்டு இருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்து உள்ளனர்.

அரசு மருத்துவமனை
வலியோடு மருத்துவமனைக்கு சென்ற அவரிடம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஆதார் கார்டு கேட்டு இருக்கிறார். எந்த அடையாள அட்டையையும் எடுத்து வரவில்லை என்று கூறி மருத்துவர் அந்த பெண்ணை பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆதார் அட்டை
பிரசவ வலியில் பெண் துடிப்பதை கண்டும் மனம் இறங்காத மருத்துவர் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் அதே வழியோடு கஸ்தூரி வீட்டுக்கு திரும்பி உள்ளார். வீட்டுக்கு வந்த சில நிமிடங்களிலும் கஸ்தூரிக்கு வலி மேலும் அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 குழந்தைகளை பெற்றெடுத்தார் கஸ்தூரி.

தாய், குழந்தைகள் பலி
ஆனால், தான் பெற்ற இரட்டை குழந்தைகளை காண்பதற்கு கஸ்தூரிக்கு கொடுத்து வைக்கவில்லை. மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நடைபெற்றதால் கஸ்தூரிக்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளது. சிறுது நேரத்திலேயே அந்த பெண் உயிரிழக்க அடுத்தடுத்து இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக பலியாகின.

மருத்துவர் சஸ்பெண்ட்
தமிழ் பெண்ணிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் பிரசவ சிகிச்சை அளிக்க மறுத்து அவரும் இரட்டை குழந்தைகளுடன் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications