கேஜிஎப்பில் களமிறங்கிய அண்ணாமலை! பைக் ஊர்வலம்! பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை! பின்னணி என்ன?
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் உள்ள கோலார் மாவட்டத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பைக் ஊர்வலம் சென்றார். மேலும் கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ளது.
இதில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது. குறிப்பாக கட்சி மேலிட தலைவர்கள் கர்நாடகத்துக்கு அடிக்கடி விசிட் செய்ய துவங்கி உள்ளனர்.
என்ன அண்ணாமலை இதெல்லாம்? கேரள பாஜக தலைவர் மகன் திருமணத்தில் பங்கேற்ற லுலு உரிமையாளர்
மேலிட தலைவர்கள் ‛விசிட்’
பாஜக சார்பில் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியும் கர்நாடகத்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது அவர்கள் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாக கட்சிக்கு சாதகமான, பாதகமான சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கட்சிகளுடன் மாநில கட்சியான மதசார்பற்ற ஜனதாதளமும் தேர்தல் பணியை துவங்கி உள்ளது.
கர்நாடகத்தில் அண்ணாமலை
கர்நாடகத்தை பொறுத்தமட்டில் பெங்களூர், கோலார் மாவட்டங்களில் அதிகளவில் தமிழர்கள் உள்ளனர். இதனால் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்களை அங்கு பிரசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலுக்கு சென்றுள்ளார். இதற்காக பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை கோலார் எம்பி முனிசாமி, மாவட்ட பாஜக தலைவர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.
பைக் ஊர்வலம்
அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் காரில் கோலார் மாவட்டம் சென்றனர். கோலார் முல்பாகல், பங்காருபேட்டை பகுதிகளில் நடந்த பாஜக பைக் ஊர்வலத்தில் அண்ணாமலை பங்கேற்றார். அதன்பின் பங்காருபேட்டையில் உள்ள சட்டமேதை அம்பேத்கார் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பைக் ஊர்வலம் மூலம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்கவயல்(கேஜிஎப்) சென்றார். இங்கு அவர் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
இதுபற்றி அண்ணாமலை கூறியதாவது: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். கேஜிஎப்பில் எந்தமாதிரியான சூழல் உள்ளது என்பதை நான் அறிந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த கோலார் மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொகுதியின் வரலாறு மாற்றப்பட்டுள்ளது. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நான் பேச உள்ளேன்'' என்றார்.
Recommended Video
கர்நாடகத்தில் பணி அனுபவம்
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் கர்நாடகத்தில் உடுப்பி, சிக்கமகளூர் மாவட்ட எஸ்பியாகவும், பெங்களூரில் துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் கர்நாடகத்தின் சிங்கம் என பெயர் பாராட்டப்பட்டவர். கன்னட மொழியும் சரளமாக பேசுவார் என்பதால் இவர் மூலம் கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூர், கோலார் மாவட்டங்களிலும், அவர் பணியாற்றிய உடுப்பி, சிக்கமகளூர் மாவட்டங்களிலும் ஓட்டு சேகரிப்பில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.