ஐடி கம்பெனிகள் ஆவேசத்திற்கு பணிந்த கர்நாடக அரசு.. பெங்களூர் வெள்ளம் பிரச்சினைக்கு தீர்வு என உறுதி
பெங்களூர்: கடந்த சில நாட்களாக கர்நாடக தலைநகர் பெங்களுரை கனமழை புரட்டியெடுத்த நிலையில் இனி வரும் காலங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்படாதவாரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அஷ்வத் நாராயண் உறுதியளித்துள்ளார்.
ஏற்கெனவே கனமழை காரணமாக தேங்கிய வெள்ளம் ஐடி தொடர்பான தொழில்களை கடுமையாக பாதித்ததாக எழுந்த புகாரையடுத்து இந்த உறுதியை அமைச்சர் அளித்திருக்கிறார்.
ஜூன் 1 முதல், கர்நாடகாவில் 820 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் 27 மாவட்டங்களில் உள்ள 187 கிராமங்களை சேர்ந்த 29,967 பேர் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் 2வது இடம்.. பெங்களூர் வெள்ளத்தால் தமிழகத்துக்கு எச்சரிக்கை மணி.. முழுவிபரம்
வெள்ள பாதிப்பு
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த கனமழை காரணமாக தற்போது வரை ரூ.7,647.13 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதனை ஈடுகட்ட தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,012.5 கோடி நிவாரண தொகையை மத்திய அரசிடம் கோர இருப்பதாக மாநில அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பான்மையான பாதிப்பு ஐடி நிறுவனங்களுடையது என்கிற தகவலும் வெளியாகியுள்ளன.
வாக்குறுதி
இந்த வெள்ளம் தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த ஐடி மற்றும் வங்கி நிறுவனங்களின் அமைப்பான அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ORRCA) முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் கனமழையால் தேங்கிய வெள்ளம் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு சுமார் ரூ.225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இனி வரும் மழைக்காலங்களில் ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்காது என அமைச்சர் அஷ்வத் நாராயணன் உறுதியளித்துள்ளார்.
நிதியுதவி
ORRCA இந்த கடிதம் எழுதியதையடுத்து, இன்ஃபோசிஸ், கோல்ட்மேன் சாக்ஸ், விப்ரோ, இன்டெல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் அமைச்சர் இந்த உறுதியை அளித்துள்ளார். அதேபோல இந்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களால் பங்களிக்க முடிந்த நிதியையும் அளிக்க உள்ளதாக மாநில ஐடி விஷன் குழுமத்தின் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதிய திட்டம்
k-100 என்றழைக்கப்படும் இந்த திட்டம் மூலம், அடுத்த பருவமழையில் மகாதேவபுரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தொழில்துறை பங்கேற்பைப் பயன்படுத்தி இப்பகுதியில் வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு குறித்த மேம்படுத்த வரைபடத்தை உருவாக்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் பொம்மை வெள்ளம் குறித்து பார்வையிட்டார்.
நிதி ஒதுக்கீடு
ரிங் ரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழை நீர் வெளியேற இயற்கையான வடிகால் வசதி இருந்துள்ளது. சுமார் 15 மீட்டர் அகலத்தில் இருந்த சில நீர்வழிகள் 3 மீட்டருக்கும் குறைவாக சுருங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். பருவமழை குறைந்தவுடன் இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.