கொச்சையான அர்த்தம்.. "இந்து" என்றால் என்ன தெரியுமா? சர்ச்சையை பற்ற வைத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்
பெங்களூர்: இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானதே அல்ல என்றும், இந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள் எனவும் கர்நாடகா காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ் லட்சுமண ராவ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேச்சு தற்போது கர்நாடகா மட்டுமல்லமால் இந்தியா முழுவதுமே பெரும் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் வித்திட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக எம்பி ஆ. ராசா உள்ளிட்டோர் இந்து மதம் குறித்து பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையான நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவரும் இதுபோல பேசியிருப்பது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.
பெரியார்.. நிமிர்ந்த டெல்லி! இந்துத்வாவா? 'அவரே’ தெறிக்க விட்றாரே! ஆ ராசா யாரை சொல்றாரு தெரியுமா?
பெரியார் முதல் ஆ.ராசா வரை..
இந்தியாவிலேயே இந்து மதத்தை அதிகமாக விமர்சித்தவர்கள் தமிழக தலைவர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைக்கு பெரியார் முதல் இன்றைக்கு திமுகவின் ஆ. ராசா வரையில் இந்துத்துவா சிந்தனைகளுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்து வரும் தலைவர்கள் தமிழகத்தில் அதிகம். அதிலும், ஆ. ராசா சமீபத்தில் பேசிய பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது. "நீ இந்துவாக இருக்கும் வரை சூத்திரன்தான்; நீ சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன்தான்" என மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டி ஆ. ராசா பேசியதற்கு பாஜகவும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
புது புயலை கிளப்பிய ஜர்கிஹோலி
ஆ. ராசா கிளப்பிய சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமண ராவ் ஜர்கிஹோலி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பெங்களூரில் இன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "இந்து என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அது இந்தியாவுக்கு சொந்தமானதா என்ன? அது பாரசீக மொழியில் இருந்து வந்த வார்த்தை. ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் நாடுகள் அடங்கிய பிராந்தியத்துக்கு சொந்தமானது. இந்து என்ற வார்த்தைக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்து என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அதற்கு கொச்சையான அர்த்தம் இருக்கிறது. அது தெரிந்தால் வெட்கப்படுவீர்கள்" என சதீஷ் ஜர்கிஹோலி பேசினார்.
கொந்தளித்த பாஜக
இந்நிலையில், ஜர்கிஹோலியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜர்கிஹோலியின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் அஷ்வந்த்நாராயண் கூறுகையில், "இந்து மதத்தினரின் மனம் புண்படும்படி சதீஷ் ஜர்கிஹோலி பேசியுள்ளார். இந்து மக்களின் உணர்வுகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்க வேண்டும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.
கருணாநிதி என்ன கூறினார்?
கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "இந்து என்ற சொல்லுக்கு திருடன் என்று பொருள் எனக் கூறியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால், இதை மறுத்த கருணாநிதி, இந்து என்றால் இதயங்களை திருடுபவர் என்றே தான் கூறியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், அவர் இதே விளக்கத்தை அளித்தார். எனினும், பாஜகவினர் இன்று வரை "கருணாநிதி இந்துக்களை திருடன் என சொல்லிவிட்டார்" என அவ்வப்போது குற்றம்சாட்டுவது உண்டு.
இந்துவுக்கு அர்த்தம் என்ன?
கருணாநிதியின் கருத்து பெரும் சர்ச்சையாகிய நிலையில், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் அப்போது ஒரு விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறுகையில், "இந்து என்றால் "திருடன்" என்று விஷ்வகோஷ் என்ற இந்தி அகராதியில் போட்டுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.அந்த அகராதியை அவர் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதில் "திருடன்" என்ற பொருள் மட்டும் போடப்படவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈரானைச் சேர்ந்த பார்சி மொழியில் அமைந்துள்ள ஓலைச் சுவடிகளில் கூறியுள்ளபடி, நமது நாடு "இந்து" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது, அது பின்னர் "இந்த்" என்று மாறியுள்ளது. நமது நாட்டு மக்கள் "இந்தி" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர். ஈரானியர்கள் பின்னர் இஸ்லாமுக்கு மாறிய பின்னர், "இந்து" என்ற வார்த்தைக்கு தவறான பொருளைஉருவாக்கினர். கபீர் (பாவிகள்), காலா (கருப்பர்கள்), லுத்தேரா (கொள்ளைக்காரன்), குலாம் (அடிமைகள்) என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர் என அந்த பார்சி மொழி ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இல.கணேசன் கூறியது குறிப்பிடத்தக்கது.