கர்நாடகா செல்பவர்களுக்கு.. தடுப்பூசி டோஸ் போட்ட சர்டிபிகேட் கட்டாயம்.. அதிரடி உத்தரவு.. முழு விவரம்!
பெங்களூரு: மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்பவர்கள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு கட்டத்தில் தினசரி கொரோனா தொற்று 40,000-க்கு மேல் சென்று அச்சத்தை ஏற்படுத்தியது.
அங்கு போடப்பட்ட கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து தற்போது 4,000-க்குள் அடங்கி விட்டது. இதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
தடுப்பூசி போடும்படி.. அஞ்சல் அட்டை மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு.. அசத்தும் பள்ளி மாணவர்கள்
பெங்களூருக்கு படையெடுப்பு
பஸ், மெட்ரோ ரெயில்கள் 50% பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் மீண்டும் செயல்படுவதால் இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு குறிப்பாக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு மீண்டும் கொரோனா அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதிரடி உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து விட்டபோதிலும் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு வருவதற்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ்
அதாவது மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கர்நாடகாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் கொண்ட ஆர்டி-பி.சி.ஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அல்லது குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் விளக்கம்
கர்நாடகாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் ஜூலை 5-க்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் நேற்று 3,450 புதிய பாதிப்புகள் பதிவாகின. 5,933 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். 93 பேர் உயிரிழந்தனர்.