பிச்சைக்காரர் மரணத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி! போஸ்டர், பேனர்கள் வேறு! ஏன் தெரியுமா?
பெங்களூர்: சாலை விபத்தில், மரணமடைந்த ஒரு பிச்சைக்காரருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் கர்நாடகாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் , ஹூவின ஹடகலி என்ற டவுன் பகுதியில் பல ஆண்டுகளாக பசவா ( 45 ) என்ற மனதளவில் பாதிக்கப்பட்ட நபர் வசித்து வந்தார்.
3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து
இவர் பொதுமக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பிச்சையாக கேட்டு பெறுவார். அதற்கு மேல் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டாராம்.
ஒரு ரூபாய்தான்
அந்த பணத்தை வைத்து உணவு சாப்பிட்டு வந்துள்ளார். மனநலம் அந்த பிச்சைக்காரருக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் இருந்து வந்தார். பசிக்கும் போது , யார் வீட்டு வாசலில் நின்றாலும் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம் பசவா.
பசவா பலி
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாலை விபத்தில் பசவா படுகாயமடைந்தார். துடித்து போன மக்கள் ஷடகலி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் இரவு பசவா உயிரிழந்தார். அவரின் மரண செய்தி அறிந்ததும் ஹூவின ஹடகலி நகரில் வசிக்கும் மக்கள் அதிர்ந்து போய் விட்டனர்.
போஸ்டர்கள்
அரசியல் தலைவர்கள், சினிமா ஸ்டார்கள் போல, பிச்சைக்காரரின் புகைப்படம் உள்ள பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமல்ல, கிராமத்தில் பொது இடத்தில் மக்கள் அஞ்சலிக்காக பசவா உடல் வைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காரணம் இருக்கிறது. பசவா முகத்தில் விழித்துச் சென்றால், அது நல்ல நாளாக இருக்கும் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களிடம் உள்ளது. எனவேதான் பசவாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
பசவா ஊர்வலம்
இதன்பிறகு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பசவா உடலை ஏற்றி வாத்திய இசை முழக்கத்துடன் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளுடன், ஊர்வலமாக மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே, இறுதி சடங்குகளை செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மக்களின் மாண்பு
அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், செல்வாக்கு மிக்கவர்களின் இறுதி ஊர்வலத்தில் இப்படியான கூட்டத்தை கர்நாடகா பார்த்துள்ளது. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர் இறுதி ஊர்வலத்திற்கும் பாசத்தோடு ஒன்று கூடி மரியாதை செலுத்தியுள்ளனர் கன்னட மக்கள். இந்த புகைப்படம் நாடு முழுக்க வைரலாக பரவி வருகிறது.