ஐபிஎஸ் பயிற்சி முடிந்து.. முதல் நாள் பணியில் சேர போன இளம் அதிகாரி விபத்தில் பலி! கர்நாடகாவில் சோகம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 26 வயதான ஹர்ஷ் பர்தன் என்ற இளம் அதிகாரி தனது ஐபிஎஸ் பணியில் சேர சென்றுள்ளார். அப்போது அவரது கார் திடீரென விபத்தில் சிக்கிய நிலையில், ஐபிஎஸ் பதவியேற்கும் முன்பே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் பெரும் ஆசைப்பட்ட விஷயத்தை அடைய நெருங்கும் போது, ஏதாவது மோசமான சம்பவம் நடந்தால் அதை நம்மால் ஏற்கவே முடியாது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

உயிரிழப்பு: கர்நாடகாவில் சமீபத்தில் தான் பயிற்சி முடித்த இளம் ஐபிஎஸ் அதிகாரி, ஹாசன் மாவட்டத்தில் நேற்று பதவியேற்கச் சென்றார். இருப்பினும், துருதிஷ்டவசமாக பதவியேற்கச் செல்லும் வழியிலேயே விபத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த அந்த இளம் அதிகாரி 26 வயதான ஹர்ஷ் பர்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் அவர், 2023ம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். கர்நாடகா கேடரைச் சேர்ந்த அவர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கச் சென்றுள்ளார். அவர் போலீஸ் வாகனத்தில் சென்ற நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. அதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
என்ன நடந்தது: திடீரென டயர் வெடித்ததால் வானகத்தைக் கட்டுப்படுத்த டிரைவரால் முடியவில்லை. அந்த கார் சாலையோரம் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது மோதியதில் மிக மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஹர்ஷ் பர்தனுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலையிலும் கூட பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதேநேரம் வாகனத்தை ஓட்டிய டிரைவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதைப் பார்த்தாலே மிக மோசமான விபத்து நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. போலீஸ் வாகனம் மிக மோசமாகச் சிதைந்து போய் இருப்பதும் தெரிகிறது.
சித்தராமையா இரங்கல்: பதவியேற்கச் சென்ற ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த ஹர்ஷ் பர்தனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, பல வருடக் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும் நேரத்தில் இதுபோல நடந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஹாசன்- மைசூர் நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே நடந்த பயங்கர விபத்தில், ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்கச் செல்லும் போது இந்த விபத்து நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. பல வருடக் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கவிருந்த இந்த நேரத்தில் இதுபோல நடந்திருக்கக் கூடாது. ஹர்ஷ் பர்தனின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அர்ப்பணிப்புள்ள அதிகாரி: அதேபோல பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் ஐபிஎஸ் அதிகாரி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதை மிக மோசமான விபத்து எனக் குறிப்பிட்ட சதானந்த கவுடா, இந்தியா மிகவும் அர்ப்பணிப்புள்ள ஒரு அதிகாரியை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள புரபேஷனரியில் உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பணிக்குச் சேர ஹாசனுக்கு செல்லும் போது தான் பர்தனின் கார் விபத்தில் சிக்கியுள்ளது. மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் அவர் நான்கு வாரப் பயிற்சியைச் சமீபத்தில் முடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications