காய்கறி மூட்டைகளில் தமிழகத்துக்கு கர்நாடகா சரக்கு கடத்தல்- அலேக்காக 2 பேரை தூக்கிய பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: காய்கறி மூட்டைகளில் மதுபாட்டில்களை பதுக்கி தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 2 பேரை கர்நாடகாவின் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் இருந்து ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்பட்டன.
அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பெருமளவு மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வேனில் காய்கறி வண்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கே.ஆர். மாக்கெட் சோதனை சாவடியில் பெங்களூரு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு காய்கறி கொண்டு சென்ற டெம்போவில், மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு இருவரை கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இந்த மதுபாட்டில்களை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர். டெம்போவில் காய்கறி சாக்குகளில் பதுக்கி கடத்தப்பட்ட 580 பெட்டிகளில் இருந்த 509 லிட்டர் மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.