"நமஸ்காரா மேடம்.." தயங்கிய பசவராஜ் பொம்மை.. "உங்க அப்பாவையே தெரியும்" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா!
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவி ஏற்கும் பசவராஜ் பொம்மை, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தமிழக மூத்த அரசியல் தலைவர்களுடன் கடந்த காலங்களில் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
Recommended Video
2008ஆம் ஆண்டில் தான் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து பாஜகவில் சேர்ந்தார் பசவராஜ் பொம்மை. கட்சிக்குள்ளும், ஆட்சி பதவிகளிலும் அவருக்கு தொடர்ந்து வளர்ச்சி தான் இருந்தது. இன்னொரு பக்கம்..
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருடனும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றவர் பசவராஜ் பொம்மை. இதற்கு அவர் வகித்து வந்த நீர்வளத்துறை அமைச்சர் என்ற பதவி முக்கியமான காரணம்.

கருணாநிதியுடன் பசவராஜ் பொம்மை
முதலில் பசவராஜ் பொம்மைக்கு அறிமுகமான தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் கருணாநிதிதான். 2009ம் ஆண்டில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர். இந்த காலகட்டத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி வகித்தார். பெங்களூரில் உள்ள தனது மகள் செல்வி இல்லத்தில் கருணாநிதி தங்கியிருந்தபோது அங்கு எடியூரப்பா, பசவராஜ் பொம்மை மற்றும் சில சீனியர் அமைச்சர்கள் சென்று திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதேபோல சிலை திறப்பு விழா நாளின் போதும், கருணாநிதியுடன் பசவராஜ் பொம்மை பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது.

டெல்லியில் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
இதேபோல தான், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் அவருடன் பேசுவதற்கு பசவராஜ் பொம்மைக்கு வாய்ப்பு கிடைத்தது . அது ஒரு சுவாரசியமான தகவல்.. அப்போது மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்டு 2012. வழக்கம்போல தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முரண்டுபிடித்ததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா. மன்மோகன்சிங் அரசு, காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக இந்த கூட்டத்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தது அப்போதைய மத்திய அரசு. இதையடுத்து டெல்லியில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகா சார்பில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ( ஊழல் புகார் காரணமாக எடியூரப்பா அப்போது பதவி விலகி இருந்தார்), நீர்வளத் துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நமஸ்காரா மேடம்
ஜெயலலிதாவை ஒரே அறையில் நேருக்கு நேர் பார்த்ததால் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மை இருவரும் சற்று டென்ஷனாக காணப்பட்டனர். ஜெயலலிதாவும் ரொம்பவே இறுக்கமாக இருந்தார். அவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ஜெகதீஷ் ஷெட்டர் திணறிக் கொண்டிருந்தார். இந்த இறுக்கமான சூழ்நிலையை உடைத்தது பசவராஜ் பொம்மைதான். "நமஸ்காரம் மேடம்.." என்று ஜெயலலிதாவைப் பார்த்து புன்முறுவலுடன் கையெடுத்துக் கும்பிட்டார் பசவராஜ் பொம்மை.

உங்க அப்பாவே எனக்கு தெரியும்
ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில் என்பதால், கன்னடத்தில் பேசுவது சற்று இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும் என்று பசவராஜ் பொம்மை நினைத்தார். அதற்கு பலனும் கிடைத்தது.. ஜெயலலிதா முகத்திலும் லேசான புன்முறுவல் எட்டிப்பார்த்தது. உடனே பசவராஜ் பொம்மைக்கு தயக்கம் சற்று குறைந்து உற்சாகம் பிறந்தது. "எனது பெயர் பசவராஜ் பொம்மை, எனது அப்பா முன்னாள் முதல்வர் எஸ்ஆர் பொம்மை.." என்று ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துகொண்டார். "ஓ.. ஹவுதா.. நிம் தந்தே நனகு சென்னாகி கொத்திரவரே.." என்று ஜெயலலிதா கன்னடத்தில் பதிலளிக்க .. இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயினர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மை. உங்கள் தந்தை எஸ்ஆர் பொம்மை எனக்கு நன்கு தெரிந்தவர்தான் என்பதைத்தான் ஜெயலலிதா கன்னடத்தில் தெரிவித்தார். அதுமட்டுமல்ல.. நான் சரோஜாதேவி உடன் தான் அவ்வப்போது கன்னடத்தில் பேசிக்கொள்வது வழக்கம்.. மற்றபடி கன்னடம் பேசுவதை நிறுத்தி விட்டதால்.. பல வார்த்தைகள் எனக்கு மறந்துவிட்டது.. என்று பசவராஜ் பொம்மையிடம் ஜெயலலிதா புன்முறுவலோடு தெரிவித்துள்ளார்.

விளாசி தள்ளிய ஜெயலலிதா
இதற்கு பிறகுதான் டுவிஸ்ட் நடந்தது. இரும்பு மனுஷி என்று கேள்விப்பட்ட ஜெயலலிதா ,சற்று புன்முறுவலோடு பேசத் தொடங்கியதும் , பசவராஜ் பொம்மை மற்றும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு தைரியம் வந்துவிட்டது. காவிரி தொடர்பான பேச்சுவார்த்தையின்போது.. தங்களிடம் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என்று ஜெயலலிதாவிடம் அவர்கள் கூறி, இப்போதைக்கு நீரை திறந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், "பேச்சு பேச்சாகத்தான் இருக்கவேண்டும்" என்பது போல ஆவேசம் காட்டியுள்ளார் ஜெயலலிதா. காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது உங்கள் கடமை என்ற ரீதியில் பேசியுள்ளார் ஜெயலலிதா .அதிலும், காவிரி ஆணையத்தின் கூட்டத்தை 6 முறை கூட்டாமல் இழுத்தடிப்பு செய்து விட்டார் மன்மோகன்சிங் என்று மத்திய அரசு மற்றும் பிரதமர் மீதும் கடுமையாக சாடியுள்ளார். ஜெயலலிதாவின் கோபத்தை பார்த்த ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரும்.. ஓகே மேடம்.. இன்னொரு முறை சந்தித்து பேசுவோம் என்று நழுவிவிட்டனர்.

பெங்களூரில் சந்திப்பு
இந்த சம்பவம் நடந்து சரியாக இரண்டு மாதங்கள் கழித்து.. நவம்பர் மாதம் பெங்களூரில் மீண்டும் ஜெயலலிதா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் இடையே காவிரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. உச்சநீதிமன்றம் இவ்விரு முதல்வர்களும் சந்தித்துப் பேசவேண்டும் என்று உத்தரவிட்டதால் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும், நீர்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

ஆவேசமான ஜெயலலிதா
பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா , "குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது கர்நாடகா. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகா தெரிவித்து விட்டது," என்று அங்கே இருந்த ஒலிபெருக்கியில் ஆவேசமாக கூறிவிட்டு , "உச்சநீதிமன்றம் சொன்னதால்தான் நான் பெங்களூர் வந்தேன். கர்நாடகா சொல் பேச்சை கேட்பதாக இல்லை. நான் உச்சநீதிமன்றத்தில், இதை தெரிவித்து, அங்கேயே பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு படபடவென கிளம்பிவிட்டார்.

சமாளித்த பசவராஜ் பொம்மை
அரண்டு போனார்கள், பசவராஜ் பொம்மை மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்ததாக வந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று நாங்கள் சொல்லவேயில்லை.. தமிழ்நாடு முதல்வர் ஏன் அப்படி சொன்னார் என்று எங்களுக்கு புரியவில்லை.. கர்நாடகாவில் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதைத்தான் எடுத்துச் சொன்னோம் என்று சமாளித்து பேட்டியளித்து விட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications