Karnataka CM: சித்து Vs டிகேஎஸ்..யாருக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு?திறக்கப்படும் ரகசிய வாக்கெடுப்பு பெட்டி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த முதல்வர் யார்? என்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் எம்எல்ஏக்களிடம் எடுத்த ரகசிய ஓட்டெடுப்பின் முடிவு பற்றியும், அது யாருக்கு சாதகமாகும் என்பது பற்றியும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றது.

பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸில் முதல்வர் பதவியை பெற முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் முதல்வர் பதவியை பெற கட்சி மேலிடத்திடம் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள அரசியல் களம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டு முதல்வர் பதவியை பெற காய்நகர்த்தி வரும் நிலையில் டிகே சிவக்குமார் இன்று டெல்லி விரைகிறார். நேற்று அவர் டெல்லி செல்ல முடிவு செய்திருந்த நிலையில் வயிற்று வலி காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில் தான் இன்று டிகே சிவக்குமார் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நேற்று முன்தினம் பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது. அதாவது சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே போட்டி உள்ள நிலையில் யாரை முதல்வராக்க வேண்டும் என்பது ரகசிய ஓட்டெடுப்பு மூலம் நடத்தப்பட்டது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோரில் யார் முதல்வராக வேண்டும் என்பதை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் ரகசியமாக ஓட்டளித்தனர்.

இதற்காக வைக்கப்பட்டு இருந்த ஓட்டு பெட்டியில் எம்எல்ஏக்கள் தங்களின் விருப்பத்தை ஓட்டுகளாக செலுத்தினர். இந்த ஓட்டு பெட்டி சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் முன்னிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் திறக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஓட்டு பெட்டி திறக்கப்பட்டால் அது சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது தற்போது வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் ஏராளமானவர்கள கடந்த 2013 தேர்தலில் வெற்றி வா சூடியவர்கள் தான். மேலும் பலரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்கள். இதனால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தான் டிகே சிவக்குமார் நேற்று மறைமுகமாக கூறியிருந்தார். மேலும் அவர் கூறிய வார்த்தை என்பது டிகே சிவக்குமார் முதல்வர் பதவி போட்டியில் இருந்து விலகுவது போல் இருந்தது. இதுதொடர்பாக டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ‛‛ சித்தராமையாவுக்கு அதிக எம்எல்ஏக்கள் உள்ளது. நான் யாரிடமும் ஆதரவு கோரவில்லை. சித்தராமையாவுக்கு ஆல் தி பெஸ்ட்'' என்றார். இது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் தற்போது டிகே சிவக்குமார் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications