4 வயது குழந்தையை கொன்றது ஏன்? பெண் சிஇஓ சுசனா சேத் வாக்குமூலம்! போலீஸார் தகவல்
பெங்களூர்: பெங்களூர் சிஇஓ சுசனா சேத் தனது 4 வயது குழந்தையை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து அவர் சில தகவல்களை கூறியுள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இவர் Mindful AI lab என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ ஆக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் கோவா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இருக்கும் சர்வீஸ் அபார்ட்மென்ட் ஒன்றில் சுசனா சேத் தனது 4 வயது மகனுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார்.
இரு நாட்கள் கழித்து வேலை நிமித்தமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்பதற்காக வாடகைக்கு ஒரு கார் ஏற்பாடு செய்து தரும்படி சர்வீஸ் அபார்ட்மென்ட் ஊழியர்களிடம் சுசனா சேத் கேட்டுள்ளார். விமானத்தில் சென்றால் எளிதாக இருக்கும் என ஊழியர்கள் கூறியிருந்த நிலையில் சுசனா சேத்தோ பிடிவாதமாக கார்தான் வேண்டும் என கேட்டார்.
இதையடுத்து வாடகை கார் வந்தது. அதில் சுசனா சேத் புறப்பட்டு சென்றார். இதையடுத்து கோவாவில் சுசனா தங்கியிருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு ஒரு டவல் முழுவதும் ரத்த கறை இருந்தது. இதை பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவாவுக்கு சுசனா சேத் வந்த போது அவருடன் 4 வயது குழந்தை இருந்தது. ஆனால் அவர் கிளம்பி பெங்களூர் சென்ற போது அவருடன் குழந்தை இல்லையே என்பது ஊழியர்களின் நினைவுக்கு வந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சுசனா சேத்திடம் கோவா போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவரோ அந்த டவலில் இருந்த ரத்த கறை எனது மாதவிடாய் ரத்தக் கறை என பொய் சொல்லியுள்ளார். மேலும் உங்களுடன் வந்த 4 வயது மகன் எங்கே என கேட்ட போது தனது நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி ஒரு முகவரியை கொடுத்துள்ளார்.
அந்த முகவரிக்கு போய் போலீஸார் விசாரித்த போது சுசனா சேத் சொன்னது போல் அங்கு யாரும் இல்லை என்றும் அவர் போலியான முகவரியை கொடுத்து போலீஸாரை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து சுசனா சேத் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை நேரில் அழைத்து விசாரித்த போது அவரது பைகளை சோதனை செய்தனர்.
அதில் ஒரு சூட்கேஸில் குழந்தையின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுசனா சேத்தை போலீஸார் கைது செய்தனர். கோவாவில் அவர் இருந்த அபார்ட்மென்ட் அறையில் இரு இருமல் மருந்து பாட்டில்கள் காலியாக இருந்தன. மகன் எப்படி இறந்தான் என சுசனா சேத்திடம் கேட்ட போது அவனை நான் எழுப்பிய போது இறந்துகிடந்தான் என்று மட்டுமே சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் மகனின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. ஆனால் கைகளை வைக்காமல் டவல் அல்லது தலையணையை வைத்து நெரித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் சுசனா சேத் அவருடைய கணவர் வெங்கட்ராமனை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். மேலும் விவாகரத்து ஆகிவிட்டால் தனது மகன் கணவருக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக அவர் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications