கர்நாடக இடைத் தேர்தல்கள்: தோற்றால் பாஜகவுக்கு நஷ்டமில்லை.. எடியூரப்பாவுக்குத்தான் பெரிய சிக்கல்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று நடைபெறும் 2 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்கள், முதல்வர் எடியூரப்பாவுக்கு அக்னி பரிட்சை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பெங்களூர் நகருக்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி, மற்றும் பெங்களூரின் அண்டை மாவட்டமான தும்கூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிரா சட்டசபை தொகுதி ஆகியவற்றுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் தற்போது பாஜகவின் பலம் 116 என்ற அளவுக்கு இருக்கிறது. எனவே இந்த இரு சட்டசபை தொகுதிகளில் தோற்றால் கூட பாஜக ஆட்சி கலையப் போவது கிடையாது. ஆனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும்.
இரு சட்டசபை தொகுதிகளுமே, தெற்கு கர்நாடக மாவட்டங்களில் அமைந்தவை. பாஜகவுக்கு வடக்கு கர்நாடகா மாவட்டங்களில்தான் செல்வாக்கு இருக்கிறது. அந்த மாவட்டங்களில் இருந்து, நடப்பு சட்டசபையில், சுமார் 100 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென் கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு, பாஜகவை விட செல்வாக்கு அதிகம்.
ஆனால், எடியூரப்பா வட கர்நாடக தொகுதிகளுக்கு எதையும் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டு அந்தக் கட்சிக்குள் இருந்து கிளம்பி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தெற்கு கர்நாடகாவில் உள்ள இந்த இரு தொகுதிகளிலும் நடைபெறும், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது எடியூரப்பாவுக்கு முக்கியமானது.
ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் தலையீடு இருப்பதாக கன்னட டிவி சேனலில் வெளியான சிறப்பு செய்தித் தொகுப்பு அம்மாநிலத்தில் புயலை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் மதிக்கிறார்களா, அல்லது இல்லையா என்பதை கணக்கீடு செய்வதற்கு இந்த இடைத்தேர்தலை பாஜக மேலிடம் பயன்படுத்தும். எடியூரப்பா குடும்ப உறுப்பினர் மீது ஊழல் புகார் கூறி செய்தி ஒளிபரப்பிய கன்னட சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷிமோகாவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வட கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பது, பாஜகவிற்குள் பல எம்எல்ஏக்கள் கோரிக்கையாக இருக்கிறது. வயது முதிர்ந்த எடியூரப்பாவை நீக்க பாஜக மேலிடமும் நாளும், தேதியும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. எனவே, கர்நாடக தேர்தல் முடிவுகள் எல்லோரையும் விட எடியூரப்பாவுக்கு ரொம்பவே முக்கியமானது.
ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற முனிரத்தினா நாயுடு, என்பவர் கடந்த வருடம் ஜூலையில் கட்சி தாவி பாஜகவில் சேர்ந்தார். எனவே அங்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிரா தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சத்யநாராயணா என்பவர் வெற்றி பெற்ற நிலையில், அவர் மரணமடைந்தார். எனவே அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இரு தொகுதிகளிலும், பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன. எதிர்க் கட்சிகளின் வாக்குகள் இரண்டாக பிரியும் என்பது ஆளும் கட்சிக்கு பலம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications