நிலாவில் சீன ரோவரை நேருக்கு நேர் சந்திக்கப்போகிறதா பிரக்யான்? என்ன நடக்கும்?
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் ஆய்வை தொடங்கியுள்ள சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவர், நிலவில் உள்ள சீனாவின் யுடு 2 என்ற ரோவரை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுந்து இருக்கிறது.

சந்திரயான் 3க்கு முன்பாக நிலவின் தென் துருவத்துக்கு அருகாமையில் அனுப்பப்பட்ட விண்கலம் என்றால் அது சாங்க்ஸ் 4 தான். நிலவின் தென் துருவத்தை ஒட்டிய மத்திய பகுதியில் தரையிறக்கப்பட்ட அந்த விண்கலத்தில் இருந்து வெளியான யுடு2 என்ற ரோவர் அங்கு தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் முறையாக நிலவின் தென் துருவத்திலேயே தரையிறக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் 3இன் பிரக்யான் ரோவர், சீனாவின் யுடு 2 ரோவரை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவும் யுடு 2 வின் நிலவரம் குறித்து குறைவான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அது நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால், கடந்த 2 வாரமாக மைனஸ் 170 டிகிரி குளிரால் அது அணைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் இந்த விண்கலம் நிலவின் 45.4561 தெற்கு அட்சரேகை, 177.5885 கிழக்கு தீர்க்கரேகையில் தரையிறங்கியது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் 69.367621 தெற்கு அட்சரேகை, 32.348126 கிழக்கு தீர்க்கரேகையில் தரையிறங்கியது. நாசா மற்றும் இஸ்ரோவில் பணியாற்றி தற்போது ஐதராபாத் எக்ஸ்டி லிங்ஸ் லேப்ஸில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானியான செய்யது அஹமது, இரு நாடுகளின் ரோவர்களும் 1,948 கிமீ தொலைவில் உள்ளது என்கிறார்.
மற்றுமொரு விண்வெளி ஆராய்ச்சியாளரான சண்முக சுப்பிரமணியன், "2 ரோவர்களுக்கும் இடையே 1,891 கிமீ தூரம் இடைவெளி உள்ளது என்கிறார். நிலவில் ஒரே நேரத்தில் 2 ரோவர்கள் செயல்பாட்டில் இருப்பது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த 2 ரோவர்களும் ஒன்றை ஒன்று சந்திக்குமா என்ற கேள்வி எழுகிறது.
Distance between 2 active rovers (#Chandrayaan3 Rover and Chang'e 4 Rover) on Moon is approx 1891 kms (± 5kms) pic.twitter.com/uzj4ePXYjZ
— Shan (Shanmuga Subramanian) (@Ramanean) August 27, 2023
ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தை நோக்கி ஆய்வு செய்யவே அனுப்பி வைக்கப்படுகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அதனால் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் சீனாவின் ரோவரும், அதன் லேண்டர் தரையிறங்கிய இடத்துக்கு அருகில்தான் சுற்றி சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
சீனாவின் யுடு 2 ரோவர் 2019 ஆம் ஆண்டு முதல் ஆய்வுப் பணிகளை செய்து வருகிறது. ஆனால், இந்தியாவின் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் என்பது 14 நாட்கள் மட்டும்தான். எனவே இந்த குறுகிய காலத்தில் அவ்வளவு தொலைவுக்கு பிரக்யான் ரோவர் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.












Click it and Unblock the Notifications