எனக்கா கடன் தரலை.. வங்கியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்!
பெங்களூர்:கடன் நிராகரிக்கப்பட்டதால், கோபமடைந்த இளைஞர் பெட்ரோல் ஊற்றி வங்கியை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் முல்லா, ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
கடந்த ஜனவரி 8ம் தேதி சனிக்கிழமை அன்று முல்லாவின் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முல்லாவின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என வங்கி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முல்லா, சனிக்கிழமை வங்கி மூடப்பட்டதும், வங்கிக்கு வந்தார். வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோல் ஊற்றினார். பின்னர் வங்கிக்குத் தீ வைத்தார். தீ அதிகரித்து வங்கி முழுவதும் பரவியது. அவ்வழியாகச் சென்றவர்கள் புகை மூட்டத்தைக் கண்டு காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்ற முல்லாவையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஹவேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு காகினெல்லி காவல் நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 436 - தீ / வெடி பொருட்கள் கொண்டு சேதம் விளைவித்தல், ஐபிசி 477 - பிறர்/பொது மக்களுக்கு கேடு விளைவித்தல், ஐபிசி 453 - அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து கம்ப்யூட்டர்கள், மின்விசிறிகள், விளக்குகள், பாஸ்புக் பிரிண்டர், பணம் எண்ணும் இயந்திரம், ஆவணங்கள், சிசிடிவி, கேஷ் கவுன்டர்கள் தீயில் கருகிப்போனது. இந்த தீ விபத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக வங்கித் தரப்பில் இருந்து போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. கடன் தராததால், வங்கிக்குத் தீ வைத்த செய்தி கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.