யாத்திரை போற நேரமா இது.. நிறுத்துங்க ராகுல்.. காங்கிரஸ் தலைவர் திடீர் கோரிக்கை
பானாஜி: இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் பாஜகவை வீழ்த்துவதற்காக பாதயாத்திரையை கைவிட்டு உடனடியாக அங்கு பிரசாரத்துக்கு செல்லுமாறு ராகுல் காந்தியை கோவா காங்கிரஸ் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல்
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் நடைபயணம் முடிந்ததை அடுத்து தற்போது ராகுல் காந்தி ஆந்திராவில் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கிடையே இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி இருந்தது. காந்தி குடும்பத்தை சாராத ஒருத்தரை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ராகுல் காந்தியும் ஓட்டளித்தார்.

கட்சி வளர வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு கோவா மாநில முன்னாள் முதல்வரும் தெற்கு கோவா தொகுதி எம்.பியுமான பிரான்சிஸ்கோ சர்தின்கா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. அடிமட்ட அளவில் கட்சி வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

குஜராத்திற்கு ராகுல் உடனே செல்ல வேண்டும்
ராகுல் காந்தி சிறப்பான பணிகளை செய்துள்ளார். ஆனால், பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி உடனே நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேர்தல் நடைபெற உள்ள இமாசல பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு ராகுல் காந்தி உடனே செல்ல வேண்டும். பாஜகவுக்கு சவால் அளித்து அக்கட்சியை வீழ்த்தும் வல்லமை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநில மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ராகுலுக்கு உள்ளது.

சசி தரூர் விலகியிருக்க வேண்டும்
அப்போதுதான் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து சசி தரூர் விலகியிருக்க வேண்டும். போட்டியின்றி மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்படுவதற்காக அவர் இதை செய்து இருக்கலாம். சசி தரூர் எனது நண்பர்தான். நான் அவரை சந்தித்து இருந்தால் போட்டியில் இருந்து விலகுமாறு வேண்டுகோள் வைத்து இருப்பேன். ஏனென்றால் அனைவரும் மல்லிகார்ஜூன கார்கேவைத்தான் ஆதரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications