கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி... வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை
ஆகஸ்ட் மாதம் வங்கி ஊழியர்களுக்கு ரொம்ப நல்ல மாதம் தொடர் விடுமுறை அதிகம் உள்ளது. வாடிக்கையாளர்களுக்குத்தான் திண்டாட்டம்.
சென்னை: வார விடுமுறையோடு பண்டிகைக்காலங்களும், அரசு விடுமுறையும் இணைந்து வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களின் வரவு செலவு கணக்குகளை திட்டமிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வங்கிகளுக்கு ஏற்கனவே மாதத்தில் 2வது சனி, 4வது சனி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறை விட்டாலே பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காத நிலைதான் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது. மறுபடி திங்கட்கிழமை வங்கிகள் திறந்த பிறகுதான் ஏடிஎம்கள் சரியாகும் நிலை உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி
இந்நிலையில், இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14ம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 15ம் தேதி செவ்வாய் கிழமை சுதந்திர தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.
விநாயகர் சதுர்த்தி
இதனையடுத்து மீண்டும் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி, 26ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாகும்.
முன்னெச்சரிக்கை
இதனால், முன்கூட்டியே பொதுமக்கள் வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று தேவையான அளவுக்கு பணத்தை எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் பணம் இருப்பு
வங்கிகள் தொடர் விடுமுறையால் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி நிர்வாகமும் ஏடிஎம்களில் தேவையான அளவுக்கு பணத்தை இருப்பு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரொம்ப நல்ல மாதம்
ஆகஸ்ட் மாதம் அரசு ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். வாரவிடுமுறையை பாதிக்காமல் பண்டிகைக்கால விடுமுறையும் இணைந்துள்ளதால் கொண்டாட்டம்தான்.