"டபுள் கேம்" ஆடும் தங்கம்! சர்வதேச சந்தையில் சரிவு! இந்தியாவில் மட்டும் ஏற்றம் ஏன்! நாளை என்னவாகும்?
நியூயார்க்: சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்தே வருகிறது. வரிகள் தொடர்பாக டிரம்ப் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் வர்த்தகப் பதற்றம் குறைவதே இதற்குப் பிரதானக் காரணம். அதேநேரம் இந்தியாவில் இன்று திடீரெனத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. பொதுவாகத் தங்கம் விலை சர்வதேச அளவில் ஒரே ரேஞ்சில் இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஏன் உயர்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்புக்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்டியது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்தது.

சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இதற்குப் பிரதானக் காரணமாகக் கருதப்படுகிறது. நேற்றைய தினம் அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் அது தொடர்ந்தது. இன்றைய தினம் தங்கம் விலை ஒரு சதவிகிதத்திற்கும் மேல் குறைந்தது.. ஸ்பாட் தங்கம் ஒரு கிராம் 1.2% குறைந்து ஒரு அவுன்ஸ் $3,300.57க்கு வர்த்தகமானது. அதாவது 24 கேரட் ஒரு கிராம் என்ற ரேஞ்சில் ரூ.9,336க்கு வர்த்தகமானது. அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 1.1% சரிந்து 3,310.20 டாலர் (சுமார் ₹9,362.61) என்ற ரேஞ்சில் வர்த்தகமானது.
காரணம் என்ன
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் சீராகி வருவதே தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக இருக்கிறது. இது தொடர்பாக ஹை ரிட்ஜ் ஃபியூச்சர்ஸின் இயக்குநர் டேவிட் மேகர் கூறுகையில், "அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தீவிரம் ஓரளவு குறையும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் முதலீடு குறைந்துள்ளது" என்றார்.
தொடரும் தங்கம் விலை சரிவு
இம்மாதத் தொடக்கத்தில் டிரம்ப் வரிகளை அறிவித்திருந்த நிலையில், இப்போது அதில் பல மாற்றங்களைச் செய்து வரிகளைக் குறைத்து வருகிறார். இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு உதிரிப் பாகங்கள் மீதான வரியை டிரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் பல விலக்குகளை அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறை மீதான வரி பெரியளவில் குறைந்துள்ளது.
இதுபோல டிரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், வர்த்தகப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது. இதனால் தங்கத்தின் மீதான தேவை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து சரிந்து வருவதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
சர்வதேச சந்தையில் தங்கம் குறைந்தாலும் இன்று இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் 320 உயர்ந்து ரூ.71840 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,980க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுவாகத் தங்கம் விலை சர்வதேச அளவில் ஒரே ரேஞ்சில் இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஏன் உயர்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரும்.. இதற்குக் காரணம் வேறு எதுவும் இல்லை அக்ஷய திருதியை தான்.. தங்கம் விலை என்ன தான் சர்வதேச அளவில் இருந்தாலும், உள்ளூர் சூழல்களும் தங்கம் விலையில் கணிசமான பங்கு வகிக்கும்.
காரணம் என்ன
நாளை புதன்கிழமை அக்ஷய திருதியை நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடையே உள்ளது. அக்ஷய திருதியை நாளில் பலரும் தங்கம் வாங்க விருப்பப்படுவார்கள். இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் சரிந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை உயர்கிறது. நாளை அக்ஷய திருதியை இருக்கும் சூழலில், சர்வதேச சந்தையில் தங்கம் குறைந்தாலும் நாளை இந்தியாவில் உயரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications