ஆட்டத்தை ஆரம்பிக்கும் தங்கம்! உடனே பிளான் Bஐ கையில் எடுக்கும் முதலீட்டாளர்கள்.. காரணங்கள் என்ன!
சென்னை: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் மெல்ல மிகப் பெரியதாக மாறி வருகிறது. இந்த மோதலில் இப்போது அமெரிக்கா உள்ளே வந்துள்ளது. மறுபுறம் இஸ்ரேல், ஈரான் என இரு நாடுகளும் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த மோதல் நீடிக்கலாம் எனக் கருதப்படுவதால் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்தது. கடந்த ஒரு வாரமாகவே இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுக்க முயன்ற போதிலும் பெரியளவில் பதிலடி கொடுக்க முடியாமலேயே இருந்தது.

தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த மோதலில் திடீரென அமெரிக்கா உள்ளே வந்தது. ஈரானின் மூன்று அணு சக்தி தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது ஈரான் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இதனால் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீதான பார்வை அதிகரித்திருக்கிறது.
இன்றைய தினம் தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுப்போம் என உறுதியளித்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் உயரும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டில் சமீபத்தில் தான் 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் ஒரு லட்சத்தைத் தாண்டியது.
பிளான் B
தற்போதைய சூழலில் இஸ்ரேல் ஈரான் விவகாரம் முடிவதைப் போலத் தெரியவில்லை. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களில் சுமார் 95% பேர் அடுத்த ஆண்டு தங்கத்தின் இருப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் குறைவாகவே முதலீடு செய்வார்கள். ஆனால், இப்போது பல குழப்பங்கள் நிலவுவதால் அவர்கள் தங்கத்தின் முதலீட்டை அதிகரித்துள்ளன. அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு, கடல் வர்த்தக பாதிப்பு காரணமாகப் பணவீக்கம் ஏற்படலாம் என அஞ்சப்படுவதால் தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரிக்கவே போகிறது.
காரணங்கள் என்ன
அதாவது அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்துள்ள ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஓமன்- ஐக்கிய அமீரகம் இடையே உள்ள குறுகிய நீர்வழி தான் ஹார்முஸ் ஜலசந்தி. பெர்சியன் வளைகுடாவை இது ஓமன் வளைகுடா மற்றும் அரேபியக் கடலுடன் இணைக்கிறது. இது வெறும் 55 கி.மீ மட்டுமே அகலம் கொண்டிருந்தாலும் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து முனையமாக இருக்கிறது..
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 25% இந்த வழித்தடம் வழியாகவே நடைபெறுகிறது. மேலும், இயற்கை எரிவாயு வர்த்தகத்திலும் இது முக்கியமான ரூட்டாக இருக்கிறது. இந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கும் இந்த ரூட்டை மூடினால் அதன் பாதிப்பு உலகெங்கும் எதிரொலிக்கும். ஈரான் கடந்த காலங்களிலும் இந்த ஜலசந்தியை மூடுவதாக மிரட்டினாலும் கூட இதுவரை மூடியதில்லை. ஆனால், இந்த முறை நாடாளுமன்றத்தில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட வாய்ப்புகள் அதிகம்.
தங்கம் விலை உயரும்!
இப்படி மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்புகள் உச்சத்தில் இருக்கிறது. இதுபோக அமெரிக்க மத்திய வங்கி நிலைப்பாடு, ரஷ்யா உக்ரைன் மோதல் தொடர்வது எனப் பல காரணங்களால் தங்கம் விலை வரும் காலங்களிலும் அதிகரிக்கவே செய்யும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications