ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடக்கம்: ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கலுக்கு ஆக.25வரை காலக்கெடு நீட்டிப்பு
சரக்கு மற்றம் சேவை வரிக்கான படிவம் 3பி தாக்கலுக்கான காலக்கெடு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியதால் சரக்கு மற்றம் சேவை வரிக்கான படிவம் 3பி தாக்கலுக்கான காலக்கெடு வரும் ஆகஸ்டு 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே விதிப்பான சரக்கு மற்றும் சேவை வரியானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் ஜிஎஸ்டி வரிமுறைக்கு ஏற்ப தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி முறையில் அனைத்து மாதாந்திர மற்றும் வருடாந்திர படிவங்களையும் தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டிஎன் இணைய தளமும் கடந்த ஜூலை மாத இறுதியில் முழுமையான வகையில் தயார் படுத்தப்பட்டு விட்டதாக மத்திய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி யின் தலைவரும் உறுதி செய்தனர்.
ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி முறையானது வாட் வரி விதிப்பு முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பதால், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை முழுமையாகவும் எந்த விதமான குளறுபடியும் இல்லாமலும் புரிந்துகொண்டு மாதாந்திர படிவங்களை தாக்கல் செய்வதற்கு தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கணக்கு தாக்கல்
மத்திய அரசும் அவர்களின் சிரமத்தையும் கோரிக்கையில் உள்ள காரணத்தை உணர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி மாதாந்திர படிவங்களை வரும் செப்டம்பர் 20ம் தேதி வரையிலும் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தது.
செப்டம்பர் 20 காலக்கெடு
இதனால், வர்த்தகர்களும் தொழில்துறையினரும் மகிழ்ச்சியடைந்தனர், மேலும், ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி படிவத்தை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 20ம் தேதி வரையில் காலக்கெடு உள்ளதால் பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் அசட்டையாக இருந்தனர்.
ஆகஸ்ட் 20 கடைசி
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் ஜிஎஸ்டிஎன் தலைமையகத்திலிருந்து சுற்றறிக்கை விடப்பட்டது. அதாவது ஜூலை மாதத்திற்கான மொத்த கொள்முதல் மற்றும் உள்ளீட்டு பயன்பாட்டு வரிகள் (Input Tax Credit) விற்பனை மற்றும் நிகர வரிகள் (Net Tax Payable) எவ்வளவு என்று ஜிஎஸ்டிஆர் 3பி (GSTR 3B) என்னும் புதிய படிவத்தில் பூர்த்தி செய்து வரும் ஆகஸ்டு 20ம் தேதிக்குள் அனைத்து வர்த்தகர்களும் தொழில்துறையினரும் வரியினை செலுத்தவேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டது.
இணையதளம் முடக்கம்
அதிர்ச்சி அடைந்த பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் அடித்துப் பிடித்து தங்களின் வர்த்தக விபரங்களை ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் பூர்த்தி செய்து ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவு செய்ய ஒரே சமயத்தில் முயன்றனர். அனைத்து வர்த்தகர்களும் தொழில்துறையினதும் ஒரே சமயத்தில் முயன்றதால் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியது.
கனமழை வெள்ளம்
வடகிழக்கு மாநிலங்கள் மற்றம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் மாதந்திர படிவங்களை சமர்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
ஆகஸ்ட் 28 வரை தாக்கல்
இந்த சிரமங்களை எல்லாம் அறிந்து கொண்டு மத்திய அரசும் ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை வரும் ஆகஸ்டு 25ம் தேதிக்குள் அனைத்து வர்த்தகர்களும் தொழில்துறையினரும் சமர்பிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஆகஸ்டு 28ம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
|
அதிகாரப்பூர்வ வெளியீடு
ஜிஎஸ்டிஎன் டுவிட்டர் பக்கத்திலும் இது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது எதிர்பாராத காரணங்களினால், ஜிஎஸ்டிஎன் இணையதள சேவையில் தடங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.