ஜிஎஸ்டிஎன் இணையதளம்... அடுத்த வாரத்திற்குள் தயார்... கணக்கு தாக்கல் செய்யலாம்
வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் தங்களின் மாதாந்திர கொள்முதல் மற்றும் விற்பனைப் படிவங்களை எளிதாக தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டிஎன் இணையதளம் வரும் ஜூலை 24ம் தேதிக்குள் முழுமையாக தயாராகிவிடு
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மாதாந்திர விலைப்பட்டியல் மற்றும் ரிட்டன் தாக்கல் செய்வதற்கான முழுமையான அனைத்து படிவங்களும் அடங்கிய இணையதளம் வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று ஜிஎஸ்டி துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியானது கடந்த 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் அனைத்து தொழில் நிறுவனங்களும் வர்த்தகர்களும் முழு முனைப்புடன் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைளையும் விலைப்பட்டியல்களையும் புதிய கணினி மென்பொருள்களின் துணையுடன் ஜிஎஸ்டி வரிமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தும் வருகின்றனர்.

கணினி மென்பொருள்
வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் தங்களின் மாதாந்திர படிவங்களை (Monthly Returns) ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் தங்கள் நிறுவனங்களின் கணக்குகளையும் புதிய கணினி மென்பொருட்களின் மூலம் தயார் செய்து வருகின்றனர்.

ஜிஎஸ்டிஎன்
ஆனால், அதே சமயம் தங்களின் மாதாந்திர கொள்முதல் மற்றும் விற்பனை படிவங்களை (monthly returns) தாக்கல் செய்வதற்கான இணையதளம் இன்னும் அரசு தரப்பில் தயாராகவில்லை என்று வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் தங்களின் கவலையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

கால அவகாசம்
இதற்கிடையே, சில மாநிலங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்களும், தொழில்நிறுவனங்களும், உணவு விடுதிகளும் தங்கள் நிறுவனங்களின் கணினி மென்பொருள்களை ஜிஎஸ்டிக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்டுள்ளன.

கணக்கு சாப்ட்வேர்
இதனை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி துறையானது வர்த்தகர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து வரும் ஜூலை மாத இறுதிக்குள் தங்கள் நிறுவனங்களின் கணக்கு மென்பொருள்களை (Accounting Software) மாற்றியமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

ஜூலை 24ல் தயார்
தற்போது, வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் தங்களின் மாதாந்திர கொள்முதல் மற்றும் விற்பனைப் படிவங்களை எளிதாக தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டிஎன் இணையதளம் வரும் ஜூலை 24ம் தேதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்று சரக்கு மற்றும் சேவைத் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து தப்பலாம்
இதுபற்றி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜிஎஸ்டிஎன் தலைவர் நவீன் குமார், "நாங்கள் வரும் ஜூலை 24ம் தேதிக்குள் புதிய பயன்பாட்டு இணையதளத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் அனைத்து நிறுவனங்களும் வர்த்தகர்களும் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையிலோ தங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை கணக்குகளை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதனால் மாத இறுதியில் ஏற்படும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications