இன்றைய ரூ.1 கோடி.. 20 ஆண்டில் ரூ.25 லட்சமாகிடும்! "இது" தெரியலனா கோடீஸ்வரனாக இருந்தாலும் சிக்கல்தான்
சென்னை: முதலீடு செய்யும் போது அது பாதுகாப்பானதா, பணம் கண்டிப்பாக வருமா.. எவ்வளவு லாபம் வரும் என அனைத்தையும் யோசிப்போம். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுவோம். இந்த ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இல்லாமல் போனால் எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டுச் சேமித்தாலும் கூட நமக்குப் பணம் நிற்கவே நிற்காது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
முதலீடு செய்யும் போது எங்கு அரை சதவிகிதம், ஒரு சதவிகிதம் அதிகம் கிடைக்கும் என்பதை நாம் தேடித் தேடி பார்த்து வருகிறோம். ஆனால், பணவீக்கம் என்பது சத்தமே இல்லாமல் நமது சேமிப்பை அமைதியாக அரித்து வருகிறது. பொதுவாகப் பங்குச்சந்தையில் ஏற்படும் சிறு சரிவும் கூட பெரிய விஷயமாக வர்த்தக உலகில் பேசப்படும்.

பணவீக்கம்
ஆனால், பணவீக்கம் அப்படி இல்லை. நிஜமாகவே மெல்ல மெல்ல உங்கள் சேமிப்பை அரிக்கும். சரியாகக் கவனிக்காமல் விட்டால் அது உங்கள் செல்வத்தை மொத்தமாகவே அரித்துவிடும்.
காலப்போக்கில் பொருட்களின் விலைவாசி உயர்வதே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது. அதாவது கடந்தாண்டு நீங்கள் ஒரு பொருளை உதாரணமாகக் காபி தூள் 100 கிராம் ரூ.80க்கு வாங்கி இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்தாண்டு அதன் விலை ரூ.88ஆக உயர்ந்திருக்கும். இப்படி காலப்போக்கில் விலைவாசி உயர்வதே பணவீக்கத்தினால் தான்!
எவ்வளவு பாதிக்கும்!
பொதுவாக நமது நாட்டில் பணவீக்கம் ஆண்டுக்கு 5 அல்லது 7 சதவீதம் உயரும். இது மிகக் குறைவு போல தெரியலாம். ஆனால் இது காலப்போக்கில் சேர்ந்து உங்கள் வாங்கும் சக்தியை (purchasing power) குறைக்கிறது. இன்று ரூ.1 கோடி நீங்கள் பல விஷயங்களை எளிதாக வாங்கலாம். ஆனால், அதே ஒரு கோடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வேல்யூவை இழந்திருக்கும்.
உதாரணமாகச் சராசரியாக ஆண்டுக்கு 7 சதவீதம் பணவீக்கம் என வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் இன்றைய ரூ.1 கோடியின் மதிப்பு 20 வருடங்கள் கழித்து வெறும் ரூ.25.84 லட்சமாக இருக்கும். அதாவது 40களில் இருக்கும் ஒருவர், இப்போது ஓய்வு பெற ரூ.1 கோடி போதும் என நீங்கள் நினைத்தால்.. 20 வருடங்களுக்குப் பிறகு அது ரூ.4 கோடியாக உயர்ந்து இருக்கும்.
வெறும் ரூ.45 லட்சம்!
- ஆண்டுக்கு 7 சதவீதம் பணவீக்கம் இருந்தால் 20 ஆண்டுகள் கழித்து செலவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.
- இன்று வருடத்திற்குப் பள்ளி கட்டணம் ரூ.1 லட்சம் ஆகிறது என்றால் 20 வருடங்கள் கழித்து அது ரூ.3.87 லட்சமாக இருக்கும்.
- இன்று ரூ.5 லட்சம் ஆகும் மருத்துவச் செலவு, 20 வருடங்களில் ரூ.19.35 லட்சமாக இருக்கும்.
- இன்று உங்கள் வீட்டிற்கு ரூ.50,000 செலவாகிறது என்றால் அது ரூ.1.93 லட்சமாக உயரும்
எனவே, நீங்கள் 20 வருடங்களில் ஓய்வு பெறத் திட்டமிட்டு, அதற்கு ஒரு கோடி போதும் என நினைத்தால் அது மிகப் பெரிய தவறு.. அந்த காலகட்டத்தில் அது உங்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்குக் கூடப் போதுமானதாக இருக்காது.
பணம் எப்படிக் கரைகிறது!
சரி, பணவீக்கம் எப்படி உங்கள் சேமிப்பை மெல்லக் கரைக்கிறது என்பதை நாம் எளிதாகப் பார்க்கலாம். ஆண்டுக்குச் சராசரி 7% பணவீக்கம் என வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால்
- இன்று உங்களிடம் இருப்பது ரூ.1 கோடி, அதன் வேல்யூ அப்படியே 100% ஆக இருக்கும்.
- 5 ஆண்டுகளில் அதன் வாங்கும் திறன் தற்போதைய மதிப்பில் ரூ.71.30 லட்சமாக குறைந்திருக்கும். அதாவது வேல்யூ 71.3%ஆக மட்டுமே இருக்கும்.
- 10 ஆண்டுகளில் அது ரூ.50.75 லட்சமாகக் குறைந்திருக்கும். அதன் வேல்யூ 50.75%ஆகச் சரிந்திருக்கும்
- 15 ஆண்டுகளில் அது ரூ.36.15 லட்சம், அதாவது அதன் வேல்யூ 36.15%ஆக இருக்கும்
- 20 ஆண்டுகளில் மேலும் சரிந்து அது ரூ.25.84 லட்சம், அதன் தற்போதைய வேல்யூவில் 25.84%ஆக மட்டுமே இருக்கும்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. இன்று நீங்கள் ரூ.25 லட்சத்தில் என்னவெல்லாம் வாங்குகிறீர்களோ.. அதையே தான் 20 வருடங்கள் கழித்து ஒரு கோடி ரூபாயில் வாங்க முடியும். அதாவது நீங்கள் வைத்திருக்கும் பணம் அப்படியே இருக்கும். ஆனால், அதன் மதிப்பு 74 சதவீதம் சரிந்திருக்கும்.
பலரும் செய்யும் தவறு!
இங்கு முதலீடு செய்யும் பலரும் 7-8 சதவீதம் வருமானமே நல்ல வருமானம் என நினைத்து முதலீடு செய்கிறார்கள். ஆனால், பணவீக்கமே அதை காலி செய்துவிடுகிறது. இதனால் அவர்களின் உண்மையான வருமானம் ஜீரோவாகவே இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஆண்டுக்கு 8 சதவீதம் வருமானம் தரும் ஒரு திட்டத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 20 வருடங்களுக்குப் பிறகு, அது சுமார் ரூ.4.66 கோடியாக இருக்கும். ஆனால் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தால், அந்த ரூ.4.66 கோடியின் உண்மையான மதிப்பு இன்றைய மதிப்பில் வெறும் ரூ.1.20 கோடி மட்டுமே!
எனவே, நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது கவனமாக முதலீடு செய்யுங்கள். பணவீக்கத்தைத் தாண்டி லாபம் வந்தால் மட்டுமே அது உங்களுக்கு உண்மையான லாபமாக இருக்கும்!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications