அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி : நவம்பர் 2 வரை இந்தியா அவகாசம்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பைத் தள்ளிவைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதற்கான அவகாசத்தை நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தியா நீட்டித்துள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கான கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் முடிவு தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் 9ஆம்தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு சுங்க வரி அதிகரித்தது. கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களுக்கு 60 சதவீதமும், பயறு வகைகளுக்கு 30 சதவீதமும், போரிக் ஆசிட் மீதான வரி 7.5 சதவீதமும், அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இரும்பு, எஃகு பொருட்கள், ஆப்பிள்கள், முத்துகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அலாய் ஸ்டீல், ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், பருப்பு வகைகள், இரும்பு, ஆப்பிள், முத்துக்கள் போன்ற இதர பொருட்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கரவாகனங்கள் மீதான இறக்குமதி வரி மீது எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 18ஆம் தேதி வரை இந்த முடிவு ஒத்தி வைக்கப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வரி விதிப்பு காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமெரிக்க அரசு அமைப்புகளிடம் விவாதித்து வருகிறோம். அதனால் வரி விதிப்பு காலத்தை ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளோம். வரி விதிப்புக்கான காலக்கெடு மீண்டும் 45 நாட்கள் உயர்த்தப்பட்டு, நவம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றார். இது தொடர்பான அறிவிப்பினை மத்திய வருவாய்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை நவம்பர் 2ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications