தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
டெல்லி: அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், நகை தொழில் துறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதிக அளவு தங்கம் ஏற்றுமதி செய்வதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகபட்ச அளவான 4.8 சதவீதத்தை எட்டியது.
இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
பின்னர் கடந்த மாதம் 10 சதவீதமாக உயர்ந்தது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று மேலும் 5 சதவீதம், அதாவது 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதேசமயம் ரிசர்வ் வங்கியும் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மந்திரி ப.சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 650 மில்லியன் டாலருக்கும், ஜூலையில் 2.2 பில்லியன் டாலருக்கும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
இறக்குமதி குறைப்பதன்மூலம், அன்னிய செலாவணி வெளியேறுவதை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நகைக்கடைகளில் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.