இயற்கை பேரிடர்களால் இந்தியாவுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு - ஐ நா தகவல்
கடந்த 20 ஆண்டில் பேரிடர்களால் இந்தியாவிற்கு 79.5 பில்லியன் டாலர் இந்திய ரூபாயில் 6 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
டெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இயற்க்கை பேரிடருக்காக இந்தியா 6 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தகவல் தெரிவித்துள்ளது. இயற்கைப் பேரிடர்களால், கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான சுமார் 20 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாக ஐ.நாவின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது.
அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 1978 - 1997 காலகட்டங்களில் பேரிடரால் ஏற்பட்ட இழப்பை விட, கடந்த 20 ஆண்டுகளில் அதிக இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன.
கடுமையான சேதங்கள்
பூகம்பங்கள் மற்றும் சுனாமியால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம், புயல் மற்றும் வறட்சியால் பொருளாதார இழப்பு மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில் பாதிப்பு
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இயற்கைப் பேரிடர்களால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 79.5 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1998 - 2017 வரை இந்தியா சந்தித்துள்ள பேரிடர்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
100 கோடி சொத்துக்கள் இழப்பு
கடந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் பலியாகினர். மேலும் 4.4 பில்லியன் மக்கள் காயங்ளாலும், வீடுகளை இழந்துள்ளனர். 100 கோடி மதிப்பிலான சொத்துகள் அழிந்துபோகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், உலக அளவில் பேரிடரால் ஏற்பட்டுள்ள இழப்பு, சுமார் 3 ட்ரில்லியன் ஆகும்.
எத்தனை கோடி இழப்பு
புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் அதாவது 75 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா ரூ.36 லட்சம் கோடி இழப்பும், ஜப்பானுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு 4வது இடம்
இந்தியாவில், பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர்களால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது நாடாக உள்ளது.இந்தியாவுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நாவின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு கழகம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.