நிர்மலா சீதாராமனின் 'ஒரு நாடு, ஒரு கேஒய்சி' திட்டம்.. இந்தியாவின் நிதி அமைப்பை மாற்றபோகும் முடிவு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் நிதி அமைப்பை மிகவும் எளிமையானதாக மாற்றும் முக்கிய திட்டத்தை முன்வைத்துள்ளார். செபி (SEBI) அமைப்பின் 38-வது பவுண்டேஷன் தின விழாவில் பேசிய அவர், "ஒரு நாடு, ஒரு கேஒய்சி" (One Nation, One KYC) என்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மாற்றம் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வங்கி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ் போன்ற ஒவ்வொரு நிதிச் சேவைக்கும் தனித்தனியாக கேஒய்சி (Know Your Customer) செயல்முறையை முடிக்க வேண்டியுள்ளது. இது நேரத்தை வீணாக்குவதோடு, புதிய முதலீட்டாளர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை பல முறை நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலில் (Financial Stability and Development Council) விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரு கேஒய்சியின் நன்மைகள்
"ஒரு நாடு, ஒரு கேஒய்சி" திட்டத்தின்படி, முதலீட்டாளர்கள் ஒரே முறை அடையாள சரிபார்ப்பு செய்தால் போதும். அதை வங்கி, பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிதிச் சேவைகளிலும் பயன்படுத்தலாம். இந்த அமைப்பு பாதுகாப்பானது, பயன்படுத்த எளிதானது மற்றும் மலிவானதாக இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். இதை செயல்படுத்துவதற்கு செபி சிறந்த இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்திய மூலதனச் சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்களின் பங்கேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் தொடர்ச்சியான கேஒய்சி செயல்முறை புதிதாக வருபவர்களுக்கு சிக்கலாகவும், கடுமையாக உள்ளது. ஒரு நாடு ஒரு கேஒய்சி வந்தால் இந்த இடையூறு நீங்கி, முதலீடு செய்வது இன்னும் எளிதாகும்.
நிதியமைச்சர் வலுவான ஒழுங்குமுறை மற்றும் தவறுகளுக்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார். சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் பைனான்ஸ் இன்புளுயன்சர் மூலம் பலர் ஏமாற்றப்படுவதை சுட்டிக்காட்டினார். முதலீட்டாளர்களுக்கு நிதி கல்வி அளிப்பதும், மோசடிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதும் முக்கியம் எனவும் கூட்டத்தில் பேசினார்.
நிதிச் சந்தைகள் உலகளவில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், கிராஸ் பார்டர் மோசடி, செயற்கை நுண்ணறிவு தவறான பயன்பாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள உலக நாடுகளுடன் செபி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்களுக்கு பிராந்திய மொழிகளில் பெரிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று செபியை வலியுறுத்தினார்.
இந்தியாவின் வேகமாக வளரும் நிதிச் சந்தையில் முதலீட்டை எளிதாக்கி, பாதுகாப்பாக்கும் இந்த "ஒரு நாடு, ஒரு கேஒய்சி" திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.












Click it and Unblock the Notifications