கருப்பு பணம் தங்கமா வருது டும் டும் டும்!….: ரூ.1.2லட்சம் கோடி தங்கம் ஏற்றுமதியாம்!!
டெல்லி: கருப்பு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு தங்கம் வர்த்தகம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 2014ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியர்கள் பெருமளவில் கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாக பெருமளவு சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு 457 கிலோவுக்கும் அதிகமான தங்கம், அதாவது சுவிஸ் பிராங்க் 1,710 கோடி மதிப்பிலான தங்கம் ஏற்றுமதியாகியுள்ளது. இது இந்திய மதிப்பில் இது ரூ.1.2 லட்சம் கோடியாகும்.
சுவிஸ் ஏற்றுமதி
சுவிட்சர்லாந்திலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கு சுவிஸ் ஏற்றுமதி செய்த தங்கத்தின் மதிப்பு 2.8 பில்லியன் சுவிஸ் பிராங்க்(ரூ.18,000 கோடி) ஆகும். முந்தைய செப்டம்பர் மாதத்தில் இந்த ஏற்றுமதி சுமார் 2.2 பில்லியன் பிராங்க் அளவுக்கு இருந்ததாக சுவிஸ் சுங்க நிர்வாகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பரில் தங்கம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 290 கோடி சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி) மதிப்பிலான தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளாக சுவிட்சர்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
457 கிலோ தங்கம்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையான காலத்தில் மொத்தம் 457 கிலோ தங்கம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
திருமண சீசன்
நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. திருமண சீசன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிப்பே தங்க இறக்குமதி அதிகரிப்புக்குக் காரணமாகும்.
கருப்பு பணம்
சுவிட்சர்லாந்திலிருந்து தங்கம் இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவடுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க இறக்குமதியில் 60 சதவீதம் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் இதுபோல தங்கமாக இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிகரிக்கும் தங்கம், வைரம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் மறைத்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பணத்தை நமது நாட்டுக்கு திரும்ப கொண்டு வருவதற்கு தங்கம் இறக்குமதி பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை இதுபோல தங்கம் மற்றும் வைரமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிகரிக்கும் வர்த்தகம்
தங்கம் மற்றும் வைர வர்த்தகம் இரு நாடுகளிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும்,இது தொடர்பாக இரு நாடுகளிலிருந்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.