பெண்களுக்கான 5 பெஸ்ட் முதலீட்டு திட்டங்கள்.. இனி ரிஸ்க்கே இல்லாமல் வருமானம் பார்க்கலாம்!
சென்னை: வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் பெண்கள் என்ன தான் படித்து முன்னேறினாலும் கூட பொருளாதார சுதந்திரம் பெரியளவில் பெண்களுக்கு இருப்பதில்லை. பொருளாதார சுதந்திரம் அடையப் பெண்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும்.. எது ரிஸ்க் இல்லாத முதலீடாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மகளிர் தினம் வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பெண்களின் பொருளாதார சுதந்திரம் குறித்துப் பேச வேண்டியது அவசியமாகிறது. அதிலும் இந்த நவீனக் காலத்தில் அது ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.

பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்க எந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.. ரிஸ்க் இல்லாமல் எந்தளவுக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டம்
சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டம்.. வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இதுவே சிறப்பான திட்டம். உங்கள் பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் முன் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 8.2% சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 15 ஆண்டுகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம். இந்தத் திட்டத்திற்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் நிலையில், அவை நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். இதில் முதலீடு செய்யும் தொகையை வைத்து செக்ஷன் 80C-இன் கீழ் வரி விலக்கு பெறலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்
அடுத்தது மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்.. Mahila Samman Bachat Patra எனப்படும் இந்த திட்டம் பெண்களுக்கான ஆபத்து இல்லாத முதலீட்டுத் திட்டமாகும். இதில் அனைத்து வயது பெண்களும் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்சமாக ஒருவர் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு 7.5% வட்டி வழங்கப்படும்.. மேலும் இதில் முதலீடு செய்து ஒரு வருடம் கழித்து உங்கள் வைப்புத்தொகையில் 40% எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம்
மேலும், தங்கத்தில் முதலீடு செய்வதும் பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கிறது. இது பெண்களுக்கான பிரத்தியேக சேமிப்பு திட்டம் இல்லை என்றாலும் பெண்கள் ரிஸ்க் இல்லாமல் கணிசமான தொகையைப் பாதுகாத்து வைக்கத் தங்கம் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், இது நம்மைப் பணவீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும். தங்கத்தை வாங்க இப்போது பல்வேறு வழிகள் (தங்க நாணயம், நகைகள், டிஜிட்டல் கோல்ட்) உள்ள நிலையில், அதில் உங்களுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்தது என்பிஎஸ் எனப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ்.. இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்ற ஒன்று.. இதில் வட்டியும் நமக்குக் கணிசமாகக் கிடைக்கும். ரிஸ்கும் பெரிதாக இருக்காது. இதில் ஒருவர் குறைந்தபட்சமாக ரூ.100ல் இருந்து முதலீடு செய்யலாம்.. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்திற்கான வட்டியும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். இப்போது 7.7% வட்டி இதற்கு வழங்கப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதி திட்டம்
மேலும், தபால் நிலையத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் கூட ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.. அதற்கான வட்டி விகிதம் 7.1% ஆகும். நீண்ட காலம் முதலீடு செய்வோருக்கு இது ஏற்ற திட்டமாக இருக்கும்.
மற்ற ஆப்ஷன்கள்
இது தவிரக் கையில் கணிசமான தொகை இருந்தால் அதைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அரசு நிறுவனங்கள், நல்ல தனியார் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பான ரிட்டனை தரும். மேலும், மாதம் குறிப்பிட்ட தொகையை மியூட்சுவல் பண்ட் அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப் பெரியளவுக்கு உதவும். இந்த எளிமையான பிளான்களை பின்பற்றுவதன் மூலம் பெண்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்து, பண விஷயத்தில் தன்னிறைவு அடையலாம்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications