மீண்டும் தனிக்கட்சி..அமரீந்தர்சிங்- பாக்.உறவு குறித்து பாஜக விசாரிக்கனும்-பஞ்சாப் துணை முதல்வர் ஷாக்
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு குறித்து பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதலில் விசாரிக்க வேண்டும் என்று பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தவா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து அமரீந்தர்சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கும் முழுக்கு போடுவதாக அறிவித்தார் அமரீந்தர்சிங். இந்நிலையில் தாம் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு செய்ய இருப்பதாகவும் அமரீந்தர்சிங் அறிவித்திருப்பது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங். கடும் விமர்சனம்
அமரீந்தர்சிங்கின் முடிவை பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தவா கூறியிருப்பதாவது: பாஜகவுடனான கூட்டணி அமைப்பேன் என அமரீந்தர்சிங் அறிவித்திருப்பது அவர் தம்மைத்தாமே அழித்துக் கொள்வதாகும்.

அமரீந்தர்சிங்-பாக். உறவு
1984-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்தான் அமரீந்தர்சிங். அப்போது அமரீந்தர்சிங் எங்கே இருந்தார்? அவருக்கும் பாகிஸ்தானுக்கும் என்னதான் உறவு என்பது பாரதிய ஜனதா கட்சி முதலில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு சுக்ஜிந்தர் ரந்தவா கூறினார்.

சித்து மீது தேசவிரோத புகார்
முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர்சிங், மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவால் தேச பாதுகாப்புக்கு ஆபத்து என்றார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோருக்கும் சித்துவுக்குமான உறவு குறித்தும் கேள்வி எழுப்பினார். மேலும் எல்லை மாநிலமான பஞ்சாப்புக்கு சித்து போன்ற தேசவிரோதிகள் தேவை இல்லை எனவும் அமரீந்தர்சிங் சாடியிருந்தார்.

2-வது முறை தனிக்கட்சி
1984-ம் ஆண்டு பஞ்சாப் பொற்கோவிலில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது பிந்தரன்வாலே உள்ளிட்ட பஞ்சாப் பிரிவினைவாதிகள் பொற்கோவிலுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் அமரீந்தர்சிங். பின்னர் சிரோமணி அகாலிதளம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஒரு கட்டத்தில் அந்த கட்சியில் இருந்தும் விலகி தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் தனிக்கட்சி நடத்த முடியாமல் 1997-ல் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார் அமரீந்தர்சிங். தற்போது 2-வது முறையாக தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் அமரீந்தர்சிங். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பலரையும் தொடர்பு கொண்டு அமரீந்தர்சிங் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் அமரீந்தர்சிங்கை நம்பி எத்தனை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவரது கட்சியில் இணைவார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என்கின்றன பஞ்சாப் தகவல்கள்.












Click it and Unblock the Notifications