பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கும் குடைச்சல்.. மதுபான கொள்கை குறித்து சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை
சண்டிகர்: டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநில அரசின் மதுபான கொள்கை குறித்தும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இந்த மதுபான கொள்கை மூலம் தனியார் ஆதாயமடைந்தனர்; கலால்துறை அமைச்சரான துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் இந்த ஊழலுக்கு காரணம் என்பது சிபிஐ வழக்கு.

இந்த ஊழல் முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்தது என்பது அமலாக்கத்துறையின் வழக்கு. சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் இணைந்து மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான சோதனைகள், விசாரணைகள் என நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆனால் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் எனவும் கூறி வருகின்றனர்.
இன்னொரு பக்கம், ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லி ஆட்சியை கவிழ்க்கவே தம் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன; பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு நான் ஒப்புக் கொண்டால் என் மீதான வழக்குகளை வாபஸ் வாங்குவதாகவும் பாஜக பேரம் பேசுகிறது எனவும் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டினார். இதுவும் பெரும் பரபரப்பை கிளப்பியது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி பெரும் சவாலாக இருக்கிறது. இதனால்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த அரசியல் விளையாட்டில் தற்போது கெஜ்ரிவாலின் குருவான அன்னா ஹசாரே, பாஜகவுக்கு ஆதரவாக களமிறக்கப்பட்டிருக்கிறார்.
இந்த பின்னணியில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப்புக்கும் பாஜக குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் புதிய மதுபான கொள்கை முறைகேடுகளை சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications