‛‛தாம்பத்யம்’’.. மனைவியை 2 மணிநேரம் தனி அறையில் கைதிகள் சந்திக்கலாம்.. பஞ்சாப்பில் சிறையில் அமல்!
சண்டிகர்: பஞ்சாப்பில் திருமண பந்தத்தை உறுதி செய்யும் வகையில் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி, கணவரை 2 மணிநேரம் தனி அறையில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. பகவந்த் மான் முதல்வராக உள்ளார். தொடர்ச்சியாக மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை போல் சிறைத்துறையில் சில மாற்றங்களை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

மனைவியுடன் தனி அறையில்..
அதன்படி பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க செல்லும் கணவர்-மனைவிகள் அவர்களை தனியாக 2 மணிநேரம் தனி அறையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளின் திருமண பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தர்தரனில் உள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்திய சிறை, நபாவில் உள்ள மாவட்ட சிறை, பதிண்டா பெண்கள் சிறை ஆகியவற்றில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தனி அறை வசதி
இதில் தம்பதி சந்திக்கும் அறையானது குளியலறையுடன் இருக்கை உள்பட பிற அடிப்படை வசதிகளுடன் சிறை வளாகத்திலேயே இருக்கும். இந்த அறையில் அவர்கள் 2 மணிநேரம் வரை செலவிட முடியும். இந்த சலுகை என்பது 3 மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே கைதிகளுக்கு வழங்கப்படும் என சிறைத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

சான்றிதழ்கள் அவசியம்
இதன்மூலம் கைதிகளின் நன்னடத்தை அதிகரிக்கும். மேலும் சிறையில் மனைவி/கணவரை தனியாக சந்திக்க விரும்பும் நபர்கள் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் அவர்கள் இறுதி முடிவு செய்வார்கள். மேலும் சம்பந்தப்பட்ட கணவர்/மனைவி ஆகியோர் எச்ஐவி, கொரோனா இல்லை என்ற சான்றிதழ், திருமண சான்றிதழுடன் சிறைக்கு வர வேண்டும். இத்தகைய ஆவணங்களுடன் வரும் ஆண்/பெண்கள் மட்டுமே சிறையில் தங்களின் கணவர்/மனைவியுடன் 2 மணிநேரம் தனி அறையில் இருக்கலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பொருந்தாது?
மேலும் அனைத்து கைதிகளும் இந்த சலுகையை பெற முடியாது. இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி சிறையில் நீண்டகாலம் இருப்பதோடு, நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். பாலியல் குற்றம், ரவுடிகள், கொடூரமான குற்றவாளிகள், பயங்கரவாதிகளுக்கு இந்த சலுகை கிடையாது.

விரைவில் விரிவுப்படும்
பஞ்சாப் சிறைத்துறை டிஜிபி ஹர்ப்ரீத் சிங் சித்துகூறுகையில், ‛‛இந்த திட்டம் விரைவில் மாநிலத்தில் உள்ள பிற சிறைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். 2ம் கட்டமாக செப்டம்பர் மாதத்துக்குள் 6 சிறைகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது'' என்றார். பஞ்சாபில் மொத்தம் 26 சிறைகள் உள்ளன. இவற்றில் 10 மத்திய சிறைகள், 6 மாவட்ட சிறைகள், 5 துணை சிறைகள், 2 பெண்கள் சிறைகள் உள்ளிட்டவை அடங்கும்.












Click it and Unblock the Notifications