தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்
சண்டீகர்: நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை ஒடுக்க டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் வரமுடியாதபடி தடுப்புகள் அமைத்து எல்லை மூடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 12 ஆம் தேதி தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
எனினும் டெல்லி எல்லையான சாம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டீகரில் 3 கட்டங்களுக்கு மேல் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனாலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுஉள்ள அவர்கள் இதற்காக இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் இன்று பகல் 12 மணி முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பஞ்சாப்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபடுவார்கள் என கிஷான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் செய்தியாளர்களிடம் கூறினார். சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் கீழ் வரும் அனைத்து விவசாய சங்கங்களும் நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சண்டீகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தவேளாண் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications