ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி- புது சரித்திரத்தை எழுதிய பாஜக- பெரும் ஏமாற்றத்தில் காங்கிரஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநி ல சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இருக்கிறது பாஜக. ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கான46 இடங்களைவிட அதிகமாக 48 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஹரியானாவில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்து புதிய சரித்திரத்தை எழுதி இருக்கிறது பாஜக.
ஹரியானாவில் 2009-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 90 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில்தான் வென்றது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் வ்லிமையான பலத்தில் இருந்தது இந்திய தேசிய லோக் தள் கட்சி. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. 2014 ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 47 இடங்கள் கிடைத்தன. இந்திய தேசிய லோக் தள் 19 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும்தான் வெல்ல முடிந்தது. 1990களில் இருந்தே சொற்ப இடங்களில் மட்டுமே வென்று வந்த பாஜகவுக்கு ஹரியானா மக்கள் 2014-ல் அரியாசனம் தந்தனர்.

2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 46 இடங்கள் கிடைக்கவில்லை. பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களில் வென்றது. இதனையடுத்து ஜேஜேபி ஆதரவுடன் பாஜக 2-வது முறையாக ஆட்சியை அமைத்தது. பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி நான்கரை ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் திடீரென பாஜக அரசுக்கான ஆதரவை ஜேஜேபி வாபஸ் பெற்றது. ஆனாலும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
ஹரியானாவில் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுவதாக கூறப்பட்டது. இதனை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சியும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ். ஆனால் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களோ, ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ்தான் என்ற மித மிஞ்சிய நம்பிக்கையில் ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹரியானாவில் அக்னிபாத் வீரர்கள் தேர்வு, விவசாயிகள் பிரச்சனை, பாஜகவின் உட்கட்சி மோதல் என பாஜகவுக்கு எதிரான களமாகத்தான் இருந்தது. தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகளும் இதனையே வெளிப்படுத்தி இருந்தன. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும் என அத்தனை கருத்து கணிப்புகளும் திட்டவட்டமான முடிவைத் தெரிவித்தன.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் ஹரியானாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. ஆனால் பின்னர் கள நிலவரம் வேறாகிவிட்டது. ஹரியானாவில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களைவிட பாஜக அதிக தொகுதிகளில் 48 இடங்களில் பாஜக வென்றுள்ளது., காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்துள்ளது. ஹரியானா அரசியல் வரலாற்றில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைத்துவிட்டது பாஜக!












Click it and Unblock the Notifications