பஞ்சாப் சட்டசபை தேர்தல்: ஓரங்கட்டப்படுகிறாரா?.. முதல்வர் வேட்பாளர் யார்?.. சித்து பரபரப்பு விளக்கம்!
சண்டீகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் பரபரப்பு பதிலை அளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி நாள் ஜனவரி 28 ஆகும். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 31 ஆகும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும்.

77 இடங்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்று அமரீந்தர் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. இரண்டாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களுடன் வென்றது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக, அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.

யார் முதல்வர்
இந்த நிலையில் பாஜக சார்பில் யாரை முதல்வராக முன்னிறுத்த போகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் வேட்பாளராகலாம் என்ற திட்டத்தில் உள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

முதல்வர் வேட்பாளர் யார்
எனவே பஞ்சாப் மாநிலத்தில் இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. எனவே அமரீந்தர் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அப்பதவிக்கு வந்து சில மாதங்கள்தான ஆகின்றன.

பிரதமருக்கு நடந்த பாதுகாப்பு குளறுபடி
எனவே அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்களா என தெரியவில்லை. மேலும் பிரதமருக்கு நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து முதல்வர் சன்னி மீது நிறைய பேருக்கு அதிருப்திகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

சித்து பரபரப்பு ட்வீட்
இதுகுறித்து சண்டீகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சித்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை மக்களே முடிவு செய்தார்கள். காங்கிரஸ் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும் என யார் உங்களுக்கு சொன்னார்கள்? நான் பஞ்சாப்பில் போட்டியிடுவேன். எம்எல்ஏக்களை எப்படி மக்கள் தேர்வு செய்கிறார்களோ அது போல் முதல்வரையும் அவர்களாகவே தேர்வு செய்யட்டும் என்றார். இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் முதல்வர் சன்னியின் புகைப்படமோ, மற்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் புகைப்படங்களோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications