மோடி பாதுகாப்பு.. பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்பு.. எஸ்.பி சஸ்பெண்ட்
சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் இன்று அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். முதலில் பிரதமர் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.
Recommended Video

அதன்பிறகு மோசமான வானிலை காரணமாக பிரதமர் சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது. அதனபடி சாலை மார்க்கமாக பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் சிலர் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு குளறுபடி
இதன் காரணமாக பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாமல் பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதன்பிறகு பிரதமர் மோடி மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார்.

'உயிரோடவாவது வந்தேனே'
அப்போது பிரதமர் மோடி விமான நிலைய அதிகாரிகளிடம், '' உங்களின் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்.. நான் அட்லீஸ்ட் ஏர்போர்ட்டுக்கு உயிரோடவாவது வந்தேனே என்று கூறியதாக செய்திகள் வலம் வருகின்றன.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை பஞ்சாப் அரசு செய்ய தவறி விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக குற்றம்சாட்டியது.

பாஜகவினரின் திட்டமிட்ட செயல்
இதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' நமது பிரதமர் மீது எங்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ஏற்கனேவே அகற்றும்படி கூறியதாகவும், இது பாஜகவினரின் திட்டமிட்ட செயல் என்றும் சன்னி தெரிவித்தார்.

போலீஸ் எஸ்.பி இடைநீக்கம்
இந்த நிலையில் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எழுந்துள்ள நிலையில் பஞ்சாப் பெரோஸ்பூர் போலீஸ் எஸ்.பி ஹர்மன் ஹன்ஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளது. எனவே பஞ்சாப் அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications