"போலீசாரால் அனைவரையும் பாதுகாக்க முடியாது.." ஹரியானா வன்முறை.. முதல்வர் மனோகர் லால் கட்டார் பேச்சு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடரும் நிலையில், போலீசாரால் அனைவரையும் பாதுகாக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தைத் தொடர்ந்து இப்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள நூஹ் மாவட்டத்தில் மத ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது.
அங்கு பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து நடத்திய மத ஊர்வலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்கு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.

ஹரியானா வன்முறை: நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறையால் குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் ஃபரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரும் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாநிலத்தில் அமைதி திரும்பப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்திய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் போலீசார் பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார். ஹரியானாவில் கடந்த திங்கட்கிழமை முதல் வன்முறை தொடர்ந்து வருகிறது. ஹரியானாவில் ஏற்பட்ட இந்த மோதல், இப்போது டெல்லிக்கும் பரவும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் கருத்து: இந்த வன்முறை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மக்களிடையே நட்பு இல்லையென்றால் பாதுகாப்பு இருக்காது. ஒருவரை ஒருவர் வெறுக்கும் சூழல் இருந்தால் பாதுகாப்பு இருக்காது. மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் போலீஸ், ராணுவம், நீங்கள், நான் என யாராலும் இங்குள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க முடியாது.
இங்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைதியான சூழல் தேவை. சமூகத்தில் நல்லுறவு இருக்க வேண்டும்... அதற்காக அமைதிக் குழுக்களை அமைத்துள்ளோம்.. பிரச்சனை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். போலீசாரால் அனைவரையும் பாதுகாக்க முடியாது.. இங்கு இரண்டு லட்சம் பேர் இருக்கும் நிலையில், 50,000 போலீசார் மட்டுமே உள்ளனர்" என்று அவர் கூறினார்.
தகவல்கள் இல்லை: அதேநேரம் ஹரியானாவில் ஏற்பட்டுள்ள இந்த வகுப்புவாத மோதல்களைத் தூண்டிய நபர் எனக் கூறப்படும் மோனு மனேசர் குறித்து தங்களிடம் எந்தவொரு தகவலும் இல்லை என்றும் ஹரியானா முதல்வர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவருக்கு எதிரான வழக்கு ராஜஸ்தானில் தான் இருக்கிறது. அவரைக் கண்டுபிடிக்க உதவி தேவைப்பட்டால், நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம் என்று நான் ராஜஸ்தான் அரசிடம் கூறியுள்ளேன்.
இப்போது ராஜஸ்தான் காவல்துறை அவரைத் தேடி வருகிறது. அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவல்களும் இல்லை. இதனால் அவர் தொடர்பாக என்னால் எந்தவொரு தகவலையும் கூற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது: கடந்த பிப்ரவரியில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோனு மானேசர் தலைமறைவாக உள்ளார். அவர் தான் இப்போது இரு தரப்பிற்கும் இடையே வெறுப்பு தூண்டும் வகையிலான சர்ச்சை வீடியோவை பரப்பியதாகவும் இதன் காரணமாக வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நூஹ் நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மத ஊர்வலத்தில் அவர் பங்கேற்றதாகவும் இதுவே வன்முறைக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசியதால், பிரச்சினை மோசமானது.. நள்ளிரவில் அங்குள்ள ஒரு மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரித்துச் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் இப்போது டெல்லிக்கு அடுத்துள்ள குருகிராமில் உள்ள முக்கிய பகுதிகளையும் அடைந்துள்ளன. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications