இளம்பெண்ணை கொன்ற பாஜக நிர்வாகி மகன்.. வழக்கில் "ஷாக்" திருப்பம்.. இன்னொரு பெண்ணும் கொலையா? அதிர்ச்சி
சண்டிகர்: உத்தரகாண்டில் இளம் பெண் ஒருவர் ரிசார்ட்டில் பாஜக நிர்வாகி மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில் இன்னொரு பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரகாண்டில் ரிஷிகேஷில் உள்ள வனந்தரா பகுதியில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த ரிசார்ட்டில் 19 வயது பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அந்த பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிட்டு செப்டம்பர் 21ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்தது. இதன்பின் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கைது
விசாரணையில் புல்கித் ஆர்யா முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் பாஜக தலைவரின் மகன் என்பதால் போலீசார் அவரிடம் சரியாக விசாரணை நடத்தவில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையானது. இதையடுத்து விசாரணையில் ரிசார்ட்டில் வேலை செய்யும் 2 ஆண்கள் உட்பட மூன்று பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. புல்கித் ஆர்யாதான் முதல் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
உடல்
இதன் பின்னர் அந்த பெண்ணின் உடலும் ரிசார்ட் அருகே இருக்கும் நீர் நிலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வினோத் ஆர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு புல்கித் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் தொழில்
அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்கு கொண்டு வர முயன்று, அதில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவரிடம் பாலியல் ரீதியான சீண்டல்களை புல்கித் ஆர்யா செய்ததாக கூறப்படுகிறது. அதோடு கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்தான் ரிசார்ட் வரும் சில "பெரிய நபர்களுக்கு" பாலியல் ரீதியாக சேவை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணை புல்கித் ஆர்யா மிரட்டி உள்ளார்.
என்ன நடந்தது?
இதற்கு அவர் இணங்க மறுக்கவே, அவரை மோசமாக தாக்கி, வன்புணர்வு செய்து புல்கித் ஆர்யா கொலை செய்ததாக கூறப்படுகிறது. புல்கித் ஆர்யா தற்போது கைது செய்யப்பட்டுவிட்டார். இந்த நிலையில் அங்கு நடந்த விசாரணையில், அந்த 19வது வயது பெண் மட்டுமல்லாமல் வேறு ஒரு பெண்ணும் அந்த ரிசார்ட்டில் இருந்து காணாமல் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன் அந்த பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இன்னொரு பெண்
இப்போது பலியான பெண் இருக்கும் அதே ஊரை சேர்ந்தவர்தான் அந்த பெண். 8 மாதங்களுக்கு முன் அந்த பெண், திடீரென மர்மமான முறையில் காணாமல் போய் இருக்கிறார். இதற்கு எதிராக அப்போது புல்கித் ஆர்யா போலீசிலும் புகார் அளித்துள்ளார். ஆனால் இப்போது அந்த பெண் காணாமல் போனதில் சந்தேகம் இருப்பதால் போலீசார் அதையும் விசாரணை செய்து வருகின்றனர். ஏனென்றால் இந்த 19 வயது பெண்ணை கொலை செய்த போது கூட அவரை காணவில்லை என்று கூறி புல்கித் ஆர்யா நாடகம் ஆடினார்.