Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்டுக்கு 10 கோடி பேர்.. மருத்துவ செலவால் வறுமையில் வாடும் இந்தியர்கள்? வினோதினி GST விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி விவகாரம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சில விளக்கங்கள் கேட்டு நடிகை வினோதினி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அது இப்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.

கடந்த வாரம் கோவைக்கு வந்த மத்திய நிதியமைச்சர் தொழில்முனைவோர் குறைகளைக் கேட்பதற்கான கூட்டத்தில் பங்கேற்றார். அதில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் இனிப்பு, காரம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் கணக்கு வைப்பது கஷ்டமாக உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் இனிப்பு, காரம் என உண்கிறார்கள். ஒரே பில்லில் தனித்தனி ஜிஎஸ்டி போடும் முறையால் கம்ப்யூட்டரே திணறுகிறது. ஆகவே அதை ஒரே மாதிரியாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

gst annapurna

அந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி முறையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சரைச் சந்தித்து உணவக உரிமையாளர் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியானது. அது மேலும் சர்ச்சையானது. அதனை அடுத்து அன்னபூர்ணா முதலாளி இதை மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் அமைதியானது.

இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதே கூட்டத்தில் அளித்த முத்ரா கடன் சம்பந்தமான புள்ளிவிவரம் தவறானது என்ற சர்ச்சை எழுந்தது. அதாவது கோவையில் மட்டும் 20 லட்சம் முத்ரா கணக்குகள் உள்ளன என்றும் இதற்காக 13 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நிர்மலா தெரிவித்திருந்தார். கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையே 34 லட்சம் பேர்தான். இதில் 20 லட்சம் பேர் எப்படி முத்ரா கடன் பெற முடியும் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் இது வங்கி மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரம்தான். வேண்டுமானால் நான் மறுமுறை சரி பார்த்து வேண்டுமானால் விளக்கம் அளிக்கிறேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.

இப்போது அதே ஜிஎஸ்டி விவகாரம் குறித்து நடிகை வினோதினி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார். விநோதினி பேசுகையில், "நான் இன்றைக்கு முக்கியமான விசயத்தைப் பற்றி பேச போகிறேன். இதை உங்களுடன் மட்டுமல்ல. ஒரு முக்கியமான மேடம் கூட பேசலாம் என்று இருக்கிறேன். அவர் பெயர் விமலா வெட்ங்கராமன் என்று வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் கமலா ஹாரிஸ் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால், இவரைப் போலவே பவர்புல் பதவியில் இருக்கக்கூடிய ஒரு பெண்மணியைப் பற்றித்தான் பேச போகிறேன். இவர் பெயர் கமலா கோதண்டராமன் என்று வைத்து கொள்ளலாம்" என்று பேச்சை தொடங்கினார் வினோதனி.

“இந்த வீடியோவில் ஏதேனும் தவறுதலான கருத்துகளை சொல்லி இருந்தால் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எனக்கு மன்னிப்பு வழங்கி விடுங்கள் என்று சொல்லிவிடுகிறேன். ஏனென்றால், நான் பேசிய பிறகு அவர்கள் பின்னால் எனக்குத் தெரியாமல் ஆள் வைத்து வீடியோ எடுத்து வெளியிடுவார்கள். அதைத் தவிர்க்க முன்கூட்டியே நானே மன்னிப்பு கேட்டு விடுகிறேன். ஜிஎஸ்டி பற்றிய உணவக உரிமையாளர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பி இருந்தார். எல்லா உணவுப் பொருட்களுக்கும் ஒரே அளவிலான ஜிஎஸ்டியை கொண்டுவாருங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி வரியைக் கணக்கிடுவது கஷ்டமாக உள்ளது என்று சொல்லி இருக்கிறார். நானும் ஜிஎஸ்டியைப் பற்றித்தான் பேசப் போகிறேன். இந்த வரி பற்றி பேச்சு வந்தாலே கோபம்தான் வருகிறது. சம்பாதிப்பதற்காக வரி கட்டுகிறோம். அது போக வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் மறைமுகமாக வரி கட்டுகிறோம். அப்படிப் பார்த்தால் நாட்டில் வரிகட்டாத மக்களே இல்லை.

gst annapurna

சமீபத்தில் கூட ஒரு செய்தி படித்தேன். 1900 கோடிக்குப் போடப்பட்ட சாலைக்காகச் சுங்கவரி சாவடியின் மூலம் 8 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாம். 1900 கோடியும் மக்கள் வரிப் பணத்திலிருந்துதான் சாலை போடப்பட்டது. அந்தச் சாலைக்கு மீண்டும் 8 ஆயிரம் கோடி வசூல் செய்திருக்கிறார் அது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்?

வட இந்தியாவில் இப்போது காரத்திற்கு உண்டான ஜிஎஸ்டியை குறைத்து இருக்கிறார்கள். அதேபோல பத்ரிநாத், கேதார்நாத், வைஷ்ணு தேசி போன்ற கோயில்களுக்குப் பக்தி யாத்திரைக்கு ஷேர்டு ஹெலிக்காப்டரில் பயண செய்தால் அதற்கான டிக்கெட் விலைக்கான வரியை 5% ஆக குறைத்து இருக்கிறார்கள். ஆனால், கார், பைக் சீட்டுக்கான ஜிஎஸ்டி 28% வரை அதிகமாகி இருக்கிறது. மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டால் அதற்கு 18% வரி கட்ட வேண்டி உள்ளது என மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பி வந்தார்கள். 7% மக்கள் ஒவ்வொரு வருடமும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் என்று சொல்கிறது. அதாவது 10கோடி பேர் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். ஏன் தள்ளப்படுகிறார்கள்? மருத்துவச் செலவுக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் இழந்துவிட்டு ஏழையாகிவிடுகிறார்கள்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே பொது சுகாதாரம் என்பது இப்போது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அது ஒரு விவாதமாக மாறி இருக்கிறது. நமது உடல்நலம் சரியில்லை என்றால் நாமேதான் பார்த்து கொள்ள வேண்டும். அரசு அதற்கு உதவாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது மட்டுமல்ல இயற்கை பேரிடர் வந்தால் கூட அரசு நம்மைக் காப்பாற்று என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

நமக்கு ஏதேனும் வியாதி வந்தால் மருத்துவச் செலவு செய்தால் அதற்கு 18% வரி. ஆகவே மருத்துவமனைக்குப் போவதைவிட பத்ரிநாத், கேதார்நாத் போய் வேண்டிக் கொண்டால் 5% வரி. எனவே நாம் சாமியிடம் போய் கும்பிடுவதுதான் நல்லது என அரசு சொல்கிறது. சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு சர்வேவை எடுத்துள்ளது. அதில், இந்தியாவில் உள்ள 50கோடி மக்களுக்கு எந்தவித மருத்துவ காப்பீடும் இல்லை என்று சொல்லி இருக்கிறது. 40 கோடி மக்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டைத்தான் வைத்துள்ளனர்.

இதனால்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே மருத்துவக் காப்பீட்டுக்கு போடப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டி அதிகம் என்று கூறி குறைக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். எப்படி ஜிஎஸ்டி கட்டாமல் ஏமாற்றி வரும் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டால், ஆரம்பத்திலிருந்து மொத்த வரியைக் கட்ட சொல்கிறார்களோ அதைப்போல இதுவரை 18% வரியைக் கட்டி உள்ளதை கணக்கிட்டுத் திரும்ப அளிக்கவும் மக்கள் கேட்கிறார்கள். இது பற்றி நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த விவாதம் எழுந்துள்ளது. அதைக் கேட்டுக்கொண்ட நிர்மலா அக்டோபர் மாதம் இதைப் பற்றி முடிவை அறிவிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். என்னைக் கேட்டால் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டியே இருக்கக் கூடாது என்றுதான் சொல்வேன்.

ஏனென்றால் பிசிசிஐக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஜெய்ப்பூர் ஏர்போர்ட் கட்டுவதற்காக அதானிக்கு ஜிஎஸ்டி நீக்கிவிட்டார்கள். நாம் நாய் பிஸ்கெட் முதல் கோல்டு பிஸ்கெட் வரை ஜிஎஸ்டி கட்டுகிறோம். ஆனால், பிசிசிஐ, அதானி எல்லாம் பலகோடி சம்பாதித்துவிட்டு ஜிஎஸ்டி கட்டுவதே இல்லை. வரி விலக்கு பெற்றுவிடுகிறார்கள். இது எந்த ஊர் நியாயம்?" என்று கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+