போட்டுத்தாக்கும் மழை.. அடுத்த 2 மணி நேரத்திற்கு.. சென்னை உட்பட இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வரும் சூழலில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்ததைக் காட்டிலும் நல்ல முறையிலேயே பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நல்ல நிலையில் உள்ளன.
இதனால் கடந்த காலங்களைப் போல அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மழை
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் முதலே தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை அசோக் நகர், கிண்டி, வடபழனி, கேகே நகர், ராமபுரம், பரங்கிமலை, மீனம்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், கோயம்பேடு, அண்ணாநகர், மதுரவாயல், மயிலாப்பூர் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.

10 மாவட்டங்கள்
சென்னை மட்டுமின்றி கடலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக் குறிப்பில் நாளை (அக். 13) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டிருந்தது.

எந்த மாவட்டங்கள்
அதேபோல நாளை மறுநாள் (அக். 14) நீலகிரி, கோயம்புத்தூர் , ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கன மழையும்., சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி ,பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே செல்லும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications