முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இடஒதுக்கீடு அளிக்கலாமா? முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
Recommended Video
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் முக ஸடாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சூழலில் மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதனை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இதனிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு பொதுப்பிரிவில் உள் பிரிவாக 10 சதவீத இடஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசு செயல்படுத்தினால் மருத்துவப்படிப்பில் 25 சதவீத இடங்களை ஒதுக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதனை ஏற்று இந்த ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மருத்துவபடிப்பில் சேரும் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்படும் என்று புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், இதனை ஏற்க கூடாது என சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதுபற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவித்தார்.
இதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸடாலின் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளார்கள். இந்த கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.