வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள்.. கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கும்பகோணம்: வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டு சென்னை வந்துள்ள 10 சாமி சிலைகள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன.
இது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை சிலை தடுப்பு பிரிவினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மாயமான சிலைகளை வெளிநாடுகளிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளை போலீஸார் எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டார்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்! தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம் செய்த பெண்! நெகிழ்ச்சி
சிலைகள்
முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து திருடு போன சிலைகளை மீட்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக கோயில்களில் இருந்து திருடு போன பல சிலைகள் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களிலும் கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருப்பது தெரியவந்தது.
தமிழக கோயில்கள்
உடனே இந்த சிலைகள் எல்லாம் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டவைதான் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள், தடயங்கள் சேகரிப்பட்டன. அவை எல்லாமே சட்டப்படியான ஆதாரங்கள் ஆகும். இந்த ஆதாரங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் டெல்லியில் உள்ள இந்தியத் தொல்பொருள் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
10 சிலைகள்
அந்த 10 சிலைகளையும், தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 10 சாமி சிலைகள் டெல்லியிலிருந்து ரயிலில் சனிக்கிழமை சென்னை வந்தன. துவாரபாலகர், நடராஜர், சிவன்- பார்வதி, குழந்தை பருவ சம்பந்தர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் சென்னை வந்தடைந்துள்ளது.
எந்த கோயிலுடையது
அதில் இரு துவாரபாலகர் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தானநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோவிலை சேர்ந்தவை.. நடராஜர் சிலையானது, தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்கநாதர் சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலையும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜ பெருமாள் கோவிலையும், சிவன்-பார்வதி சிலை, தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகிநாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலை நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலையும் சேர்ந்தவையாகும். ஆனால், நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலை சேர்ந்தது என்று தெரியவில்லை.
இன்று ஒப்படைப்பு
அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 சிலைகளும் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 4 சிலைகளும் நேற்று முன் தினம் இரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவை இன்று கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.