பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு! திருவாரூர் ராமையா டூ திமுக பொதுச்செயலாளர்! பிளாஷ்பேக்!
சென்னை: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அவர் புகழ்பரப்பும் வகையில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தன் வாழ்நாள் முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாக, சமரசமின்றி சுயமரியாதையாக வாழ்ந்தவர் க.அன்பழகன்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இவ்வேளையில் அவர் குறித்த சிறிய பிளாஷ்பேக்கை இங்கே காணலாம்.

தமிழ் மீது ஆர்வம்
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த க.அன்பழகன், பெற்றோர் சூட்டிய ராமையா என்ற பெயருடன் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்த அவர் பெரியாரின் கொள்கையை ஏற்று செயலாற்றத் தொடங்கினார். தனக்கு இருந்த தனித்தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரி பயின்ற காலத்தில் ராமையா என்ற பெயரை அன்பழகன் என தாமே மாற்றிக்கொண்டார்.

பேராசிரியர் தம்பி
இளங்கலை முடித்த கையோடு அந்தக்காலத்திலேயே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கிய அவர், அவ்வப்போது அண்ணாவை சந்திக்க வந்து செல்வார். அவ்வாறு அன்பழகன் வரும்போதெல்லாம். ''அடடா வாப்பா பேராசிரியர் தம்பி'' என அண்ணா வாஞ்சையோடு அழைத்தது மட்டுமல்லாமல், தன்னை சுற்றி இருபோரிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அன்று அண்ணா சூட்டிய பேராசிரியர் பட்டம் பின்னாளில் அவருக்கு தனிப்பெரும் அடையாளமாக மாறி ''இனமான பேராசியர் அன்பழகன்'' என அழைக்கப்பட்டு வந்தார்.

விட்டுக் கொடுக்கவில்லை
மறைந்த கருணாநிதிக்கும் -மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கும் ஏறத்தாழ 75 ஆண்டுகால நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் இடையே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் ஏற்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் பொதுமேடைகளிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ, அல்லது குடும்பத்தினரிடமோ விட்டுக்கொடுத்ததில்லை.

துணிச்சலாக பேசுவார்
கட்சி மற்றும் ஆட்சி தொடர்புடைய விவகாரங்களில் பேராசிரியர் அன்பழகனை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படையாக எடுத்துக்கூறக் கூடியவர். அதே சமயம் யார் மனதும் புண் படாதவாறு, வார்த்தைகளில் கவனம் செலுத்துவதில் மிகுந்த கண்ணும் கருத்துமாக இருப்பார். பொதுவாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் போது யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார் அன்பழகன். சாந்தமாகவும், முகமலர்ச்சியாகவும் பேசுவது அன்பழகனின் சிறப்பு இயல்புகளில் முக்கியமான ஒன்று.

43 ஆண்டுகள்
கடந்த 1977-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை 43 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்துள்ளார். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட அன்பழகன் நூற்றாண்டு நிறைவையொட்டி பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் அங்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications