சென்னை அருகே “ஷாக்”.. எடப்பாடி ஏற்றிய 100 அடி அதிமுக கொடி! கம்பம் விழுந்து தொண்டர் பலி
சென்னை: மதுராந்தகம் அருகே 100 அடி உயர அதிமுக கட்சிக்கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே 100 அடி உயர அதிமுகவின் கொடிக்கம்பம் அமைந்து உள்ளது.
இதில் கடந்த ஜூலை மாதம் அமைக்கப்பட்ட இந்த கொடிக்கம்பத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயாலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

மாண்டஸ் புயலால் சேதமடைந்த கொடி
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்துச் சென்ற அதிமுக கொடி கம்பத்திற்குள் சிக்கிக்கொண்டு சேதமடைந்தது. இதனை தொடர்ந்த அந்த கொடியை கழற்றி மீண்டும் சரியாக பொறுத்த அதிமுகவினர் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர்.

கிரேன் மூலம் கொடியை மாற்ற திட்டம்
கொடியை மாற்றுவதற்காக கம்பத்தில் உள்ள கயிற்றை அவர்கள் இழுத்து உள்ளனர். அப்போது கயிறு கீழே வராததால் கிரேன் மூலம் கொடியை இறக்கி கொடி கம்பத்தின் கயிற்றை சரி செய்து மீண்டும் கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்றி புதிய கொடியை பொறுத்த முடிவு செய்தனர். இதற்காக இன்று ராட்சத கிரேன் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.

உடைந்து விழுந்த கம்பம்
அதன் மூலம் சேதமடைந்த அதிமுக கொடியை அகற்றி புதிய கொடியை பொறுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியின்போது கொடிக்கம்பமும் சேதமடைந்து இருந்ததால் அது இரண்டாக உடைந்து, அதில் ஒரு பாகம் கீழே நின்றிருந்த பணியில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளியின் தலை மீது விழுந்தது.

உயிரிழந்த செல்லப்பன்
இதில் படுகாயமடைந்த அந்த கூலித் தொழிலாளியை மீட்டு அதிமுகவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறி உள்ளனர். கொடிக்கம்பம் விழுந்து உயிரிழந்தவர் மதுராந்தகத்தை அடுத்த சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த சுப்பராயன் என்பவரின் மகன் செல்லப்பன் என்பது தெரியவந்து இருக்கிறது. செல்லப்பன் அதிமுக உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது.

போலீஸ் தீவிர விசாரணை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மதுராந்தகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்லப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்த அதிமுக கொடிக்கம்பம் கீழே விழுந்த அக்கட்சியை சேர்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எப்போது ஏற்றிய கொடி?
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்து பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்ட சமயத்தில் மதுராந்தகத்தில் இந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்ததாக கூறப்படுகிறது.

அச்சம் தரும் உயரமான கொடிகள்
தமிழ்நாட்டை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் வண்டலூரில் இருந்து தொழுப்பேடு வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் 70 அடி முதல் 100 அடி வரை உயரம் கொண்ட ராட்சத கொடிக் கம்பங்களில் பிரம்மாண்ட கொடிகளை ஏற்றி வைத்து உள்ளனர். இவற்றால் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் ஏற்படும் என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications