ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான 11 பேருக்கும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி.. எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பிரபல ரௌடியான கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தவகையில் தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக வீடியோ கான்ஃபரன்சிங்கில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையிட்டனர். நீதித்துறை நடுவரும் இதற்கு அனுமதி அளித்தார்.
11 பேரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போது தான் கொலைக்கு உண்மையான காரணம் என்ன, கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது யார், கொலையாளிகளுக்கு நிதி உதவி செய்தது யார், சட்ட உதவி அளித்தது யார், கொலையின் பின்னணியில் இருப்பது யார் உள்ளிட்ட விவரங்கள் தெரியும் என போலீசார் தங்களது மனுவில் தெரிவித்தனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் 7 நாட்கள் ரிமாண்டில் எடுக்க கோரி இருந்த நிலையில் 5 நாட்களுக்கு அனுமத் அளித்துள்ளது எழும்பூர் கோர்ட்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் ஒருபுறம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்களை அழைத்து கொலையாளிகள் அனைவரையும் சிறையில் வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications