ஆளுநர் போட்ட செக்.. 113-ல் சிக்கிய விஜய்.. விஜயகாந்தால் முடியாததை செய்வாரா? 2016 கனவு நனவாகிறதா?
சென்னை: தலைமைச் செயலகத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 113 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துள்ள தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையைத் தொட பெரும் போராட்டம் நடத்தி வருகிறது.. மெஜாரிட்டியை நிரூபிக்க ஆதரவு கடிதங்களைக் கோரி ஆளுநர் மாளிகை கெடுபிடி காட்டுவதால், விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க விஜய் தரப்பு தீவிரமாக முற்பட்டுள்ளது.. அப்படியானால் 2016-ல் விஜயகாந்த் தலைமையில் சாத்தியப்படாத அந்த மாற்று ஆட்சி மாற்றம், 2026-ல் விஜய் மூலமாக நனவாகுமா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக 108 இடங்களை வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் ஆதரவோடு 113 இடங்களைக் கையில் வைத்திருக்கிறது.. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற நம்பருக்கு இன்னும் 5 இடங்கள் தேவை..

விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்குமா
ஆட்சி அமைக்க மெஜாரிட்டி ஆதரவு கட்டாயம் என்பதால், ஆதரவுக் கடிதங்களை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற விஜய் தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.. தவெக நிர்வாகிகள் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளனர்..
இந்த அரசியல் சூழலை பார்த்தால், அப்படியே 2016 மக்கள் நலக் கூட்டணியை மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகிறது.. அன்று திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இடதுசாரிகளும், திருமாவளவனும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினார்கள்.. பிறகு விஜயகாந்த் அந்த கூட்டணியின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அந்த கூட்டணி எந்த இடத்தையும் கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்தது..
விஜயகாந்த் இடத்தில் விஜய்
அந்த அனுபவத்தின் பின்னணியில், இன்று விஜய் தலைமையிலான தவெக ஒரு வலுவான நிலைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
அன்று அந்தத் தேமுதிக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும், சரியாக 10 ஆண்டுகள் கழித்து இன்று அதே இடத்திற்கு நடிகர் விஜய் வந்துள்ளார்.. அன்று விஜயகாந்தைப் போலவே திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், ஒரு படி மேலே போய் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சிக் கட்டிலுக்கு மிக அருகில் நிற்கிறார்.
மாற்று அரசியல் கனவு
2016-ல் விஜயகாந்தின் தலைமையில் சாத்தியப்படாத அந்த 'மாற்று அரசியல்' கனவு, இன்று விஜய் தலைமையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிகவின் ஆதரவுடன் நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் மேலோங்கியுள்ளது..
நாளை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தங்களது முடிவை அறிவிக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.. அவர்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தங்களது முடிவை அறிவிப்பதாக திருமாவளவனும் சொல்லி உள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணி
எனினும், கடந்த 2016-லிருந்த அரசியல் சூழல் மற்றும் இன்றைய சூழல் இடையே மிகப்பெரிய மாற்றம் உள்ளது.. அப்போது பலவீனமான கூட்டணியாக இருந்த மக்கள் நலக் கூட்டணி இன்று ஒரு வலுவான தனிப்பட்ட கட்சியின் அரசியல் நிலைமையுடன் ஒப்பிடப்படுகிறது.. ஆனால் அந்த முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் கட்சிகளின் நிலைப்பாடு தான் இறுதி தீர்மானமாக இருக்கும்..
ஒருவேளை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தால் புதிய கூட்டணி ஆட்சி உருவாகும் வாய்ப்பு உள்ளது.. இல்லாவிட்டால் ஆளுநரின் அடுத்த நடவடிக்கை அரசியல் சூழலை மாற்றக்கூடும்.. தற்போதைய நிலையில், எந்த முடிவும் இறுதி வடிவம் பெறவில்லை என்பது மட்டும் உறுதி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications